
<h2><strong>" ஒரு தலைபட்சமாக பெண்ணை காதலித்த இளைஞர் "</strong></h2>
<p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்னபுதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது உடன் பிறந்த சகோதரியான பாக்கியலெட்சுமியின் மகள் அபிநயாவை , வெள்ளைச் சாமியின் மூத்த மகன் முருகேசனுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.</p>
<p>வெள்ளைச்சாமியின் இளைய மகன் சிவபாலன் ( வயது 30 ) சட்டக் கல்லூரியில் 2 - ம் ஆண்டு படித்து வந்தார். அண்ணி அபிநயாவின் உடன் பிறந்த சகோதரியான தாரணியை , சிவபாலன் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மே 19 - ம் தேதி சிவபாலன் , தாரணியை திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தி அவரது வீட்டில் தகராறு செய்ததாக தெரிகிறது.</p>
<h2><strong>" திருமணம் செய்ய கோரி டார்ச்சர் "</strong></h2>
<p>இது குறித்து தாரணியின் புகாரின் பேரில் மானாமதுரை மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சிவபாலனை கைது செய்தனர். ஜாமீனில் வந்த நிலையில் மீண்டும் தாரணியை திருமணம் செய்து வைக்குமாறு கூறி தொடர்ந்து அவரது குடும்பத்தினரை டார்ச்சர் செய்து வந்துள்ளார்.</p>
<p>கடந்த வாரம் தாரணியின் வீட்டிற்கு சென்ற சிவபாலன் திருமணம் செய்து வைக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு தாரணியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அரிவாளுடன் தாரணியை தேடி அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.</p>
<p>தகராறு செய்தவரை தாரணியின் தந்தை முருகேசன் தடுத்துள்ளார். ஆத்திரமடைந்து அவரது கையில் வெட்டிய சிவபாலன் , தடுக்க வந்த தாரணியின் சகோதரர் அருண் ராஜாவையும் வெட்ட முயன்றுள்ளார். இதனால் முருகேசன், அருண்ராஜா ஆகியோர் சேர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p>
<p>தகவலறிந்து மானாமதுரை போலீசார் விரைந்து சென்று சிவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக முருகேசன் ( வயது 50 ), அவரது மகன் அருண்ராஜா ( வயது 19 ) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த முருகேசனும், அருண் ராஜாவும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>
Source: Read Full Article