
<p style="text-align: justify;">தமிழகத்தில் எதிர்கால மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு ஏற்ப நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 'முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம்' (CMIUDM) தொடங்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், முதலமைச்சருமான சி. ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> திங்கள்கிழமை அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பிறகு, முதலமைச்சரின் இந்த முக்கிய அறிவிப்புகளை கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் வாசித்தார். இந்த சிறப்புத் திட்டமானது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வெளிப்படையான மற்றும் எளிமையான நகர சேவைகளை வழங்கவும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்கள்</h3>
<p style="text-align: justify;">இத்திட்டத்தின் கீழ் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் திருநீர்மலை ஆகிய பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்தை புதுப்பித்து விரிவுபடுத்த ரூ.254 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் தற்போது 58 வார்டுகளில் வழங்கப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை எஞ்சியுள்ள 42 வார்டுகளுக்கும் விரிவுபடுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தென்காசி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 286 குடியிருப்புகள் மற்றும் திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. திருவொற்றியூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 'மூவிங் பெட் பயோஃபில்ம் ரியாக்டர்' (MBBR) தொழில்நுட்பம் மூலம் ரூ.42 கோடியில் புதுப்பிக்கப்படும். மேலும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள கழிவுநீர் அமைப்புகளை பராமரிக்க ரூ.102 கோடி மதிப்பீட்டில் நவீன இயந்திரங்கள் வாங்கப்படும்.</p>
<h3 style="text-align: justify;">கழிவு மேலாண்மை மற்றும் கட்டமைப்பு மேம்பாடு</h3>
<p style="text-align: justify;">ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க 15 பேரூராட்சிகளில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கிடங்குகளில் உள்ள 29 லட்சம் மெட்ரிக் டன் பழைய கழிவுகள் பயோ-மைனிங் முறையில் அகற்றப்படும். இதேபோல ஆவடி, தாம்பரம், கோவை மற்றும் 25 நகராட்சிகளில் உள்ள குப்பைகளை பயோ-மைனிங் மூலம் அகற்ற ரூ.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உருவாக்கப்படும் உயிரி வாயுவை, சுருக்கப்பட்ட உயிரி வாயுவாக (CBG) மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு லட்சம் எல்.இ.டி (LED) தெருவிளக்குகள் பொருத்தப்பட உள்ளன.</p>
<h3 style="text-align: justify;">வெள்ளத்தடுப்பு மற்றும் இதர நகர நலத்திட்டங்கள்</h3>
<p style="text-align: justify;">வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், பாடி மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் தேங்கும் மழைநீரை கூவம் ஆற்றில் வடிக்க ஓட்டேரி நல்லா கால்வாய் ஜீரோ பாயிண்டில் இருந்து ஜவஹர்லால் நேரு சாலை வழியாக புதிய மழைநீர் வடிகால் கட்டப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வெறிநாய் தொற்றை தடுக்கவும், தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யவும் ரூ.107 கோடி செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Source: Read Full Article