
<p style="text-align: justify;">நாகப்பட்டினம்: ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அதை நீக்கிவிடும் தலம் எங்கிருக்கிறது என்று தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள்.</p>
<p style="text-align: justify;">பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 123-வது தலமாக நாகை மாவட்டம் திருக்குவளை கோளிலிநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்து இறைவன் கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி வண்டமர் பூங்குழலி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். இறைவன் கோளிலிநாதரை வழிபடுவதால், பக்தர்களுக்கு ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அவை நீங்கிவிடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/f552bf1b5ce8415a29cc589171c67fb31786267191867733_original.jpg" /><br /> <br />இத்தலத்துக்கு திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பதிகம் பாடப்பட்ட ஸ்தலம். சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதால் அவரது படைப்புத் தொழிலை இறைவன் பறித்து சாபம் இடுகிறார். இதனால் தனது சாபம் நீங்க, பிரம்மா இத்தல இறைவனை தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்குகிறார். தொடர்ந்து அத்தீர்த்தத்தால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார்.</p>
<p style="text-align: justify;">பிரம்மாவுக்கு சாபம் ஏற்பட்டதால் அவரது படைப்புத் தொழில் பாதிக்கப்பட, அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் நவக்கிரகங்களாலும் தங்களது தொழிலை சரிவர செய்ய முடியவில்லை. நவக்கிரகங்களும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றனர். நவக்கோள்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கும் கோளிலிநாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று. கோளிலிநாதரை வழிபடுவதால், பக்தர்களுக்கு ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அவை நீங்கிவிடும் என்பது இத்தலத்தின் சிறப்பு. பிரம்மா வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று.</p>
<p style="text-align: justify;">திருவாரூரில் இருந்து தென்கிழக்கே எட்டுக்குடி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. இத்தலத்துக்கு அருகில், திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன.</p>
<p style="text-align: justify;">திருக்கோளிலி தலம், தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்துக்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. </p>
<p style="text-align: justify;">மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் திருக்குவளை என்றும் பெயர் பெற்றது. கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. பிரகார வலம் வரும்போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் லிங்க மூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் சந்நிதிகளும் உள்ளன. முருகப் பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. </p>
<p style="text-align: justify;">அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டும் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன. பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதால் இத்தலத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வேண்டுதல் நிறைவேறுகிறது என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத உறுதியான குரலாக ஒலிக்கிறது. </p>
Source: Read Full Article