
<p>உலகப்புகழ் பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமாக பல கோடி மதிப்பிலான நிலங்கள் உள்ளது. அதில் ரூபாய் 100 கோடி மதிப்பிலான நிலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.</p>
<h2><strong>முக்கிய குற்றவாளி மரணம்:</strong></h2>
<p>இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் இருந்த நிலையில் உயிரிழந்தார். அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2><strong>காரணம் என்ன?</strong></h2>
<p>66 வயதான அன்வர்தீனுக்கு நெஞ்சுவலி நேற்றிரவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்கனவே பல்வேறு உடல்நலக்கோளாறுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.</p>
<p>இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயபிரகாஷ் நேற்றிரவு திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார். அவரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.</p>
<h2><strong>11 பேர் கைது:</strong></h2>
<p>இந்த வழக்கில் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், சேதுபதி என ஏற்கனவே கைது செய்யப்பட்ட 11 பேர் ஜாமின் கோரி திண்டுக்கல் முதலாவவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அவர்களது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>அன்வர்தீன் உயிரிழந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/what-is-the-starting-price-of-the-new-renault-duster-270364" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
<p> </p>
Source: Read Full Article