
<h2>ஆட்சியை பிடித்து அசத்திய தவெக</h2>
<p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக- அதிமுக என்ற இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளது. அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் இதுவரை இல்லாத வகையில் தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வந்த அதிமுக, இந்த தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள் கொத்து கொத்தாக தவெகவிற்கு பல்டி அடித்து வருகிறார்கள்.</p>
<h2>தவெகவிற்கு பல்டி அடித்த அதிமுக மாஜிக்கள்</h2>
<p>ஒவ்வொரு சனிக்கிழமையும் பனையூரில் நடைபெற்ற நிகழ்வில் அதிமுக மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் என அடுத்தடுத்து இணைந்து வந்தனர். அந்த வகையில் அதிமுகவில் இருந்தால் இனி எதிர்காலம் இல்லையென திட்டமிட்டு முன்கூட்டியே தவெகவிற்கு சென்றால் முக்கிய பதவிகளை தட்டி தூக்கிவிடலாம் என கருதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்த கடம்பூர் ராஜூ தவெகவிற்கு பல்டி அடித்தார்.</p>
<p>இதே போல திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தொகுதியில் இருந்து அதிமுக ஆட்சியில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்த உடுமலை ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த எம்.சி.சம்பத் உள்ளிட்டவர்கள் தவெக தலைமை அலுவலக பனையூர் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்து தவெகவில் இணைந்தனர். </p>
<h2>பதவி இல்லை- தவிக்கும் அதிமுக மாஜிக்கள்</h2>
<p>அதே நேரம் இவர்கள் தவெகவில் இணைந்த பின்னர், தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், மரகம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்டவர்களுக்கு அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியானது வழங்கி தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டார். ஆனால் முதல் ஆளாக சென்றால் முதலில் பதவி வாங்கிவிடலாம் என பிளான் போட்டவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது தவெக தலைமை. இதனால் என்ன செய்வது என தெரியாமல் மூன்னாள் அதிமுக மாஜி அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி, எம்எஸ்எம் ஆனந்த் உள்ளிட்டவர்கள் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. </p>
<h2>புலம்பும் அதிமுக மாஜிக்கள்</h2>
<p>மேலும் எந்த பொறுப்பும் வழங்கப்படாத காரணத்தால் தவெக சார்பாக நடைபெறும் கட்சி நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள அழைப்பும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் கட்சியில் இணைந்து 2 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், இன்னமும் தவெக தலைவர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையென கூறப்படுகிறது. எனவே அதிமுகவில் இருந்து விலகி <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வில் இணைந்து தவறு செய்துவிட்டோமா என யோசனையில் இருக்கும் அதிமுக மாஜிக்கள் தங்கள் ஆதரவு நிர்வாகிகளிடம் வேதனையை பகிர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/technology/an-amazing-5g-recharge-plan-from-jio-for-rs-198-270520" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article