
<p>ராஜஸ்தானில் முழுமையாக நெய்யை மட்டுமே கொண்டு கட்டி எழுப்பப்பட்ட கோயிலில் இன்றளவும், கோடைகாலத்தில் வெண்ணெய் வடிவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<h2><strong>40 ஆயிரம் கிலோ நெய்யில் கோயில்:</strong></h2>
<p>இந்திய ஆச்சரியங்களுக்கு பெயர் போனது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதில் சில காண்போரை மெய்சிலிரிக்க வைப்பதோடு, எப்படி சாத்தியமானது என்ற பதிலில்லா கேள்வியும் எழ செய்கிறது. ராஜஸ்தானின் பாலைவன நகரமான பிகானேரில், 550 ஆண்டுகள் பழமையான ஒரு கோயில் உள்ளது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? பிகானேரில் தண்ணீர் எப்போதுமே பற்றாக்குறை நிலவுவதால், இந்தக் கோயில் முழுவதும் தண்ணீரைப் பயன்படுத்தாமல், நெய்யை மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது என்ற தகவலை அறியும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? இது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமணக் கோயிலாகும். இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைப் புராணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பண்டாசர் சமணக் கோயில் என குறிப்பிடப்படுகிறது. வெளியாகியுள்ள தகவலின்படி இதன் கட்டுமானத்திற்கான கலவையை தயாரிக்கும்போது, தண்ணீருக்குப் பதிலாக சுமார் 40,000 கிலோ சுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/education/highest-paying-course-after-12th-details-in-pics-269927" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>வடியும் வெண்ணெய்?</strong></h2>
<p>இதனிடையே, கோடையின் கடும் வெப்பம் நிறைந்த நாட்களில், கோயிலின் தரைப்பகுதிகளில் வெண்ணெயின் தடயங்களை உணர முடிவதாக உள்ளூர் மக்களின் கருத்து மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. வரலாறு, பொறியியல் அல்லது நாட்டுப்புறக் கதை எனப் பல கோணங்களில் ஆச்சரியம் அளிப்பதோடு, ராஜஸ்தானின் மிக அற்புதமான கலாச்சார ஈர்ப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. ராஜஸ்தானிற்கு வருகை தரும் வரலாற்று ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆன்மீகப் பயணிகளை தவறவிடாமல் சுற்றிப்பார்க்கும் தளமாகவும் இந்த கோயில் உள்ளது. இந்தியாவில் உள்ள இந்தத் தனித்துவமான கோயில் தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/TxvqMFhH9Hc?si=U3DVLeu5Qfq7Tmjs" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>கோயிலின் கட்டுமான வரலாறு</strong></h2>
<p>பண்டாசர் ஜெயின் கோயில், ஜெயின் மதத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பதிவுகளும் ஜெயின் மரபுகளும், இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் 1468-ஆம் ஆண்டில் பண்டாச ஓஸ்வாலின் ஆதரவின் கீழ் தொடங்கப்பட்டதைக் காட்டுகின்றன. அவர் பிகானேரைச் சேர்ந்த ஒரு செல்வந்த ஜைன வணிகர் ஆவார். ராஜஸ்தானின் இந்தப் பகுதி கடுமையான வறட்சியாலும், கடும் தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி, சிந்திய நெய்யின் ஒரு துளியை கவனமாகப் பாதுகாத்ததால் பண்டாசா கேலிக்கு உள்ளானார். தனது செயல்கள் பேராசையால் உந்தப்பட்டவை அல்ல என்பதை நிரூபிப்பதற்காக, பண்டாசா சாத்தியத்திர்கு வாய்ப்பே இல்லை என்பதை போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி கோயிலைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கலவையை தயாரிக்க தண்ணீருக்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்துவதாக கூறினார். உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, கட்டுமானத்தின் போது சுண்ணாம்பு கலவையில் சுமார் 40,000 கிலோ சுத்தமான நெய் கலக்கப்பட்டது. வரலாற்றாசிரியர்கள் இதை அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட உண்மையாகக் கருதாமல், கோயிலின் நீடித்த வாய்மொழி மரபின் ஒரு பகுதியாகவே நம்புகின்றனர். இருப்பினும், இந்தக் கதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு, இன்று அதுவே கோயிலின் அடையாளமாக விளங்குகிறது. பண்டாசர் 1514-ல் காலமானார், ஆனால் கட்டுமானப் பணிகள் பல தசாப்தங்களுக்கு தொடர்ந்து ஏறக்குறைய 86 ஆண்டுகளுக்குப் பிறகு, சுமார் 1554-ல் இக்கட்டுமானம் நிறைவடைந்தது.</p>
<p> </p>
<h2><strong>நெய் கோயில்</strong></h2>
<p>கோடை காலங்களில் இப்பகுதியின் வெப்பநிலை 45°C-ஐ கடக்கும்போது, பழமையான கல் தரையின் சில பகுதிகளில் சிறிய எண்ணெய் போன்ற தடயங்கள் தோன்றுவதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். பல பக்தர்கள் இதை நெய்யின் எச்சம் என்று கருதுகின்றனர். இருப்பினும், இதை உறுதிப்படுத்தும் உறுதியான அறிவியல் ஆய்வு எதுவும் இல்லை. இருப்பினும் இந்த கதை கேட்போரை ஆச்சரியமடைய செய்வதோடு, பண்டாசர் ஜெயின் கோயிலை பிகானேரில் அதிகம் பேசப்படும் பாரம்பரியத் தலங்களில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளது. </p>
<h2><strong>கைவினைத்திறனின் தலைசிறந்த படைப்பு</strong></h2>
<p>சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோயில், கட்டிடக்கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம், நேர்த்தியான சமணக் கலைத்திறனையும் பாரம்பரிய ராஜஸ்தானி கைவினைத்திறனையும் பறைசாற்றுகிறது. இக்கோயிலில் இடம்பெற்றுள்ள சிக்கலான சுவரோவியங்கள், கூரைகளில் தங்க இலை ஓவியங்கள், நுட்பமான கண்ணாடி வேலைப்பாடு, 24 ஜெயின் தீர்த்தங்கரர்களையும் சித்தரிக்கும் சிற்பங்கள் இருப்பதும் கோயிலுக்கான அழகை மெருகூட்டுகின்றன.<strong><br /></strong></p>
<h2><strong>பாரம்பரிய நினைவுச் சின்னம்:</strong></h2>
<p>இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் (ASI) ஒரு பாரம்பரிய நினைவுச்சின்னமாக இந்த கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பண்டாசர் ஜெயின் கோயிலுக்கு செல்ல அங்கிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஜோத்பூர் விமான நிலையம் நல்ல இணைப்பு பகுதியாக உள்ளது. ரயில் மார்க்கமாக பயணிக்க விரும்பினால் கோயிலிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள பிகானேர் சந்திப்பு ரயில் நிலையம், டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக பயணிக்க விரும்பினால் ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மர் மற்றும் டெல்லியிலிருந்து வழக்கமான பேருந்துகளும் டாக்சிகளும் இயக்கப்படுகின்றன</p>
Source: Read Full Article