
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: குறுவை சாகுபடிக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 1,250 டன் உரம் வந்து சேர்ந்த்து. இதையடுத்து அந்த உரங்கள் டெல்டா மாவட்டங்களுக்கு உடனடி விநியோகம் செய்ய லாரிகள் வாயிலாக அனுப்பப்பட்டது.</p>
<p style="text-align: justify;">காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் இருந்து 1,250 டன் உரங்கள் சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/ea785119850005a5f4bb21f018f6c3331786102837708733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று பருவங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. காவிரி நீர்ப்பாசனத்தை நம்பி நடைபெறும் இந்த சாகுபடிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் நிலங்களை தயார் செய்து நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">தற்போது குறுவை சாகுபடி பணிகள் பல்வேறு பகுதிகளில் வேகமெடுத்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பிற இடுபொருட்களை போதுமான அளவில் இருப்பு வைத்து விநியோகிக்க வேளாண் துறையும், கூட்டுறவு அமைப்புகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளிலிருந்து உரங்கள் தொடர்ந்து வரவழைக்கப்பட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;">அந்த வகையில், தூத்துக்குடி உரத் துறைமுகத்தில் இருந்து 1,250 டன் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூர் ரயில் நிலைய சரக்கு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டன. ரயில் வந்தடைந்ததும் அதிகாரிகளின் கண்காணிப்பில் உர மூட்டைகள் விரைவாக இறக்கப்பட்டு, லாரிகளில் ஏற்றப்பட்டன.</p>
<p style="text-align: justify;">பின்னர் அவை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் சேவை சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப உரங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.</p>
<p style="text-align: justify;">குறுவை சாகுபடி பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேவையான உரங்கள் போதுமான அளவில் கிடைப்பது விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உரங்களின் சீரான விநியோகத்தால் சாகுபடி பணிகளில் தாமதம் ஏற்படாது என்றும், விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் உரங்கள் கிடைப்பதால் விளைச்சலை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும் என்றும் வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p style="text-align: justify;">வேளாண் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் உரம், விதைகள் மற்றும் பிற இடுபொருட்களின் இருப்பை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் உரங்களை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆற்று நீரை நம்பி பாசனம் மேற்கொள்பவர்கள் மட்டும் இந்தாண்டு குறுவை சாகுபடி செய்யாத நிலையில் பம்ப் செட் வாயிலாக குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த உரங்கள் போதுமானவையாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.</p>
Source: Read Full Article