
<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>CM Vijay Divorce Case:</strong></span> தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து மற்றும் நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கான குடியிருப்பு உரிமை கோரி மனு தாக்கல் செய்தார்.</p>
<h3 style="text-align: justify;">நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு</h3>
<p style="text-align: justify;">இந்த வழக்கு செங்கை குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பினரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் நடைமுறைச் சிக்கல்களும் பாதுகாப்பு அச்சமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இருதரப்பும் காணொளி காட்சி (Video Conference) மூலமாக ஆஜராக அனுமதி அளித்து, அதற்கான இணையதள முகவரியைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. மேலும், விஜய் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு அதிகாரம் வழங்கியிருப்பதை அவர் ஆன்லைன் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">காணொளி விசாரணை மற்றும் வழக்கு வாபஸ்</h3>
<p style="text-align: justify;">இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதைக் சுட்டிக்காட்டி விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், காணொளி வாயிலாக ஆஜரான சங்கீதா தரப்பு இன்றே விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதால், வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்து நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதி சுஜாதா முன்னிலையில் காணொளி காட்சி வாயிலாக சங்கீதா ஆஜராகி சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தனது தரப்பு விளக்கங்களை அளித்தார். விசாரணையின் முடிவில், கணவர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மீது தொடரப்பட்ட விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரும் வழக்குகளைத் தாமாகவே முன்வந்து முழுமையாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக சங்கீதா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
Source: Read Full Article