
<p>தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். </p>
<h2><strong>தவெகவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் குடைச்சல்</strong></h2>
<p>தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியைப் பிடித்தது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் இந்த தேர்தல் தோல்வியை திமுகவினரால் இன்றளவும் ஏற்க முடியவில்லை. அதனால் தொடர்ச்சியாக தவெக அரசை விமர்சனம் செய்வதோடு, முதலமைச்சர் என்றும் பாராமல் விஜயை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசி வருகிறார்கள். அதில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒருபடி மேலே போய் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் விஜயை தாறுமாறாக விளாசினார். </p>
<p>விஜயை அவதூறாக பேசியதால் ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஜூலை 3ம் தேதி அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். ஆனால் அன்றைய நாளிலேயே நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இருந்தாலும் தொடர்ச்சியாக தவெக அரசை விமர்சித்து வருகிறார். </p>
<p><iframe title="Nanjil Sampath | சீமான் முதல் பிரேமலதா வரை! பட்டாசாய் வெடித்த நாஞ்சில்! வரிக்கு வரி பறந்த விசில்" src="https://www.youtube.com/embed/vO-7ycduJCg" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>மார்க்கண்டேயன் கைது - பின்வாங்கிய பின்னணி</strong></h2>
<p>இதற்கிடையில் முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசிய வழக்கில் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு நீதி கேட்டு போன இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணனையும் கைது செய்ய போலீசார் முற்பட்டனர். ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவமனைக்கு செல்வதாக அவர் எஸ்கேப் ஆன சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வண்ணம் அனிதா ராதாகிருஷ்ணன் போராட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். </p>
<p><strong>Also Read: <a title="MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/vilathikulam-dmk-mla-markandeyan-be-remanded-to-judicial-custody-for-15-days-268348" target="_blank" rel="noopener">MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!</a></strong></p>
<h2><strong>திருச்செந்தூர் கோயில் போராட்டம்</strong></h2>
<p>அதாவது, ஜூலை 22ம் தேதி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சண்முக விலாச மண்டபம் முன்பு போடப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட் அகற்றக் கோரி தன் தலைமையில் 5 ஆயிரம் பக்தர்களைக் கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தார். தற்போது அந்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. </p>
<p>இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாச மண்டபம் கிரில் கேட் போட்டு அடைக்கப்பட்டுள்ளது. இரும்பு கிரில் கேட் அகற்றப்பட வலியுறுத்தி எனது தலைமையில் பக்தர்கள் 22.07.2026 அன்று அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். இந்த கோரிக்கைப் பற்றி நேற்று மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p>
<p>அப்போது மாவட்ட ஆட்சியர் திருக்கோயிலில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கை அனுப்பி பத்து நாட்களுக்குள் சண்முக விலாச மண்டபம் இரும்பு கிரில் கேட் அகற்றுவது பற்றியும், உள்ளூர் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கி சுவாமி தரிசனம் செய்வதற்கான நேர ஒதுக்கீடு பற்றியும் நல்ல முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று பக்தர்கள் நடத்தவிருந்த அறவழி ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைதை தொடர்ந்து தன் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த போராட்டத்தை ஒத்திவைத்ததாக சொல்லப்படுகிறது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/auto-tips-how-to-fix-a-puncture-on-your-bike-at-home-268267" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article