
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாரச்சந்தை திறக்கப்படாததையும், வாடகை மற்றும் முன்பண உயர்வையும் கண்டித்து வியாபாரிகள், விவசாயிகள் இன்று அதிகாலை முதல் காய்கறிகளைக் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து சிலர் சந்தையின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடைகளை அமைக்க முயன்றதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/d7d7e7d25dd728f1594f03795f69f6c51784450190864733_original.jpg" /></p>
<p style="text-align: justify;"><strong>இரண்டு மாதங்களாக திறக்கப்படாத புதிய சந்தை</strong></p>
<p style="text-align: justify;">பேராவூரணியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த வாரச்சந்தை, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வசதிக்காக பேருந்து நிலையம் அருகே ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து பணிகளும் இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த போதிலும், இதுவரை சந்தை திறக்கப்படாததால் வியாபாரிகள் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தனர்.</p>
<p style="text-align: justify;">இதற்கிடையில், கடந்த ஒரு ஆண்டாக தனியார் இடத்தில் வாரச்சந்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு கூடுதல் செலவில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகள் புதிய சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட வாடகை மற்றும் முன்பண தொகை தங்களால் ஏற்க முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.</p>
<p style="text-align: justify;"><strong>வாடகை உயர்வே போராட்டத்திற்கு காரணம்</strong></p>
<p style="text-align: justify;">கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற சந்தை ஏலத்தில் முந்தைய ஆண்டைவிட இரு மடங்கு அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதிய நிர்வாகம் கடைகளுக்கு லட்சக்கணக்கில் முன்பணம் மற்றும் தினசரி வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">இதன் காரணமாக தனியார் இடத்தில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று காலை புதிய சந்தைக்கு வந்த வியாபாரிகள், நுழைவாயில் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p>
<p style="text-align: justify;"><strong>காய்கறிகளைக் கொட்டி சாலை மறியல்</strong></p>
<p style="text-align: justify;">இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பேராவூரணி–அறந்தாங்கி பிரதான சாலையில் காய்கறிகளைக் கொட்டி காலை 5.30 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">"மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் வந்து உடனடியாக தீர்வு காண வேண்டும். புதிய சந்தையை உடனே திறக்க வேண்டும்" என்று வியாபாரிகள் முழக்கமிட்டனர்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/7401ab924af78961d071495f5712b1f81784450153588733_original.jpg" /></p>
<p style="text-align: justify;"><strong>கேட்டை உடைத்து கடைகள் அமைத்த வியாபாரிகள்</strong></p>
<p style="text-align: justify;">பேச்சுவார்த்தை நீண்டதால் ஆத்திரமடைந்த சிலர் வாரச்சந்தையின் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். பின்னர் தங்களுக்குப் பிடித்த இடங்களில் கடைகளை அமைக்க முயன்றதால் ஏற்கனவே இடம் பிடித்திருந்தவர்களுக்கும் புதியதாக வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.</p>
<p style="text-align: justify;"><strong>அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தை</strong></p>
<p style="text-align: justify;">சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், காவல் ஆய்வாளர்கள் அண்ணாதுரை, தனபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். புதிய வாரச்சந்தை எப்போது திறக்கப்படும், வாடகை உயர்வு குறித்து அதிகாரிகள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த போராட்டம் பேராவூரணியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. </p>
Source: Read Full Article