
<p>ஆணவ கொலைக்கு தனி சட்டம் வேண்டும் என பேரவையின் முதல் நாளிலேயே பேசி இருக்கின்றோம். இந்த முறை பேரவை கூடும்போது இது குறித்து நிச்சயம் வலியுறுத்துவேன் என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் , சமூகச் சீர்திருத்தவாதியுமான பாபு ஜெகஜீவன் ராமின் 40ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எழிலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p>
<p> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/WVaAM3rlAp4?si=TCNzkWc84XKVYFEA" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "இந்தியா முழுவதும் பாபுஜி (ஜெகஜீவன் ராம்) அவர்களின் நினைவைப் போற்றுகின்ற வகையில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். 1971-ல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் போது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து, இந்தியாவின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றியவர் அவர். இன்று இந்தியா பல்வேறு துறைகளில் வெற்றிகளை ஈட்டியிருக்கிறது என்றால், அன்றைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பாபுஜியின் துணிச்சல் மிக்க உத்திகளே அதற்குக் காரணம்" என்றார்.</p>
<p><br />மேலும், நாடாளுமன்றத்திலும், துணைப் பிரதமராக இருந்தபோதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அவர் மேற்கொண்ட கட்டமைப்புகளே இன்றும் அம்மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து வருவதாகவும், தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அவரது புகழையும் போராட்ட வரலாற்றையும் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.</p>
<p>அண்மையில் நிகழ்ந்த மரணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "தற்போது இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் முறையான ஆதாரங்களின் அடிப்படையில் அரசு சார்பில் முழுமையாக வெளிப்படுத்தப்படும். ஒருவேளை இது சாதி ஆணவப் படுகொலை என்று தெரியவந்தால், நிச்சயமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். மேலும், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக அரசப் பொறுத்தவரையில், சாதி ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு 'தனிச்சட்டம்' இயற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடு. இதற்காக நான் சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே எனது முதல் உரையிலேயே வலியுறுத்திப் பேசியிருந்தேன். தற்போது நடைபெற்று வரும் இந்தச் சட்டமன்றத் தொடரிலும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவேன். இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு நல்லதொரு முடிவு எட்டப்படும்" என்றார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/maruti-dzire-plus-minus-safety-features-prize-details-you-need-to-know-266384" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article