
<p>கனிம வளத்துறை புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை – அமைச்சர் உறுதி. </p>
<div dir="auto"><strong>புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்குதல் மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கனிம வளத்துறை தொடர்பான அனைத்து புகார்களும் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கனிம வளம் மற்றும் மணல் குவாரிகள் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் நடந்திருந்தால், அதுகுறித்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மணல் குவாரிகளில் முறைகேடுகளைத் தடுக்க டிரோன் மூலம் கண்காணிப்பு</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மணல் குவாரிகளில் முறைகேடுகளைத் தடுக்க டிரோன் மூலம் கண்காணிப்பு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், குவாரி செயல்பாடுகளுக்கு முன்னரும் பின்னரும் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், பல்வேறு இடங்களில் மணல் குவாரிகளால் விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>கனிம வளத்துறையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தனிப்பட்ட திட்டங்கள் மட்டுமின்றி, பொதுவான மாவட்ட மேம்பாட்டுப் பணிகளிலும் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார். மேலும், குப்பைகளை கொட்டுவதற்கு இடப்பற்றாக்குறை இருப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், குப்பை மேலாண்மை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டி.கே.பிரபு தெரிவித்தார். மக்களின் புகார்களுக்கு உடனடித் தீர்வு காண்பதும், கனிம வளத்துறையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதும் அரசின் முக்கிய நோக்கமாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</div>
Source: Read Full Article