
<p style="text-align: justify;">சக்தி பீட ஸ்தலங்களில் மிக முதன்மையானதாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், அம்மனுக்கு உகந்த ஆடி மாத பிறப்பை முன்னிட்டு தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆன்மீக விழாவில் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.</p>
<h3 style="text-align: justify;">தங்கத்தேரில் ஜொலித்த அம்மன்: பக்தி பரவசத்தில் பக்தர்கள்</h3>
<p style="text-align: justify;">ஆடி மாத பிறப்பு நன்னாளை ஒட்டி, காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடத்தப்பட்டன. தொடர்ந்து, அம்மனுக்கு இளம் மஞ்சள் நிற பட்டு உடுத்தப்பட்டு, அரிய திருவாபரணங்கள் மற்றும் மல்லிகை, சாமந்தி பூ மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளுடன் மங்களகரமாக காட்சியளித்த காமாட்சி அம்மன், முறைப்படி தங்கத்தேரில் எழுந்தருளினார்.</p>
<p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் "ஓம் சக்தி, பராசக்தி" என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தி பரவசத்துடன் தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்த தங்கத்தேரில் எழுந்தருளிய அம்மனை, வழிநெடுகிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகூப்பி தொழுது, மனமுருகி வணங்கி வழிபட்டனர்.</p>
<h3 style="text-align: justify;">அம்மன் வழிபாடும் பக்தி பரவசமும்</h3>
<p style="text-align: justify;">ஆடி மாதம் என்றாலே பெண் தெய்வ வழிபாட்டிற்குரிய உன்னதமான மாதமாக கருதப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான இந்த மாதத்தில், சூரியனிடமிருந்து வெளிப்படும் காந்த சக்திகள் பூமியில் ஆன்மீக அதிர்வுகளை அதிகரிக்கின்றன என்பது ஆன்மீக நம்பிக்கை. இதனால் மாரியம்மன், காமாட்சி அம்மன் உள்ளிட்ட அனைத்து சக்தி பீடங்களிலும் கூழ் வார்த்தல், தீமிதி திருவிழா, முளைப்பாரி எடுத்தல் மற்றும் வேப்பிலை ஆடை அணிதல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டு, ஊர் முழுவதும் பக்தி வெள்ளத்தில் திளைக்கும்.</p>
Source: Read Full Article