
<p style="text-align: justify;">தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளரும், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான வீரா என்பவர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">பில் பாஸ் செய்ய ரூ.1.5 லட்சம் பேரம்</h3>
<p style="text-align: justify;">செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வரும் நவீன் (24) என்பவர், ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை முடித்துள்ளார். பணி முடிந்த பின்னரும் அதற்கான பில் தொகை பாஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்துள்ளது. இதனால், <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசமியை நவீன் அணுகியுள்ளார். அப்போது அவரை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்த வீரா, பில் பாஸ் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். நவீன் தரப்பில் அவ்வளவு தொகை தர இயலாது எனக் கூறி கெஞ்சியதை அடுத்து, இறுதியாக ரூ.75,000 தர ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<h3 style="text-align: justify;">கூடிக்கொண்டே போன லஞ்சப் பணம்</h3>
<p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து, கடந்த 9-ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் வீராவின் ஜி-பே (G-Pay) கணக்கிற்கு ரூ.50,000 பணத்தை ஒப்பந்ததாரர் நவீன் அனுப்பியுள்ளார். ஆனால், மீதமுள்ள தொகையை வழங்க கடந்த 10-ஆம் தேதி நவீன் சென்றபோது, "ஒரு லட்சம் போதாது, ரூ.2 லட்சம் கொடு" என வீரா திடீரென அடாவடி செய்துள்ளார். ஒப்பந்ததாரர் நவீன் தனக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கூறி மீண்டும் கெஞ்சியதை அடுத்து, லஞ்சத் தொகை ரூ.1,30,000 ஆக இறுதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. லஞ்சப் பணத்திற்கு நவீன் ஒப்புக்கொண்ட உடனே, ஊராட்சி மன்ற எழுத்தரைத் (கிளர்க்) தொடர்புகொண்ட ஊராட்சி மன்ற தலைவர் வீரா, நவீனின் பில்லை உடனே பாஸ் செய்யுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.</p>
<h3 style="text-align: justify;">ஜி-பே மற்றும் நேரில் கைமாறிய லஞ்சம்</h3>
<p style="text-align: justify;">இதன் தொடர்ச்சியாக, கடந்த 11-ஆம் தேதி வீராவின் ஜி-பே கணக்கிற்கு மேலும் ரூ.50,000 அனுப்பப்பட்டது. மீதமுள்ள ரூ.30,000 லஞ்சப் பணத்தை நவீன் நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரமே தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருவதாக கூறப்படுகிறது. இவ்வளவு தொகையை லஞ்சமாகக் கொடுத்த பிறகும், ஒப்பந்ததாரர் நவீனுக்கான பில் தொகை இன்னும் பாஸ் செய்யப்படாமல் நிலுவையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது .</p>
<h3 style="text-align: justify;">ஏற்கனவே பதவி பறிக்கப்பட்ட மாம்பாக்கம் தலைவர்</h3>
<p style="text-align: justify;">தற்போது லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள ஊராட்சி மன்ற தலைவர் வீரா (எ) வீராசாமிக்கு ஏற்கனவே பல்வேறு சர்ச்சைக்குரிய பின்னணிகள் உள்ளன. கடந்த 2023 செப்டம்பர் மாதம் இவர் முறைகேடு செய்ததாக 1, 2, 5 ஆகிய வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அவரது 'செக் பவர்' (காசோலை அதிகாரம்) ரத்து செய்யப்பட்டது. </p>
<p style="text-align: justify;">மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் 6 வார்டு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால், இவரது தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. எனினும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் வீரா மீண்டும் ஊராட்சி மன்ற தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Source: Read Full Article