
<h2>மாஜி அமைச்சர்களுக்கு சிக்கல்</h2>
<p>தமிழகத்தில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஆட்சி அமைந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தா.மோ அன்பரசன்,எ.வ.வேலு, <a title="செந்தில் பாலாஜி" href="https://tamil.abplive.com/topic/senthil-balaji" data-type="interlinkingkeywords">செந்தில் பாலாஜி</a>, சிவசங்கர் சிக்கலில் மாட்டியுள்ளனர். இந்த நிலையில், கடந்த திமுக ஆட்சி காலத்தின் போது அமைக்கப்படாத சாலைக்கு, சாலை அமைத்தாக கூறி பல கோடி ரூபாயை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஜூன் 25 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது பல ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p>
<h2>சிங்கப்பூர் சென்ற எ.வ.வேலு</h2>
<p>இந்த பரபரப்பான சூழ்நிலையில் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அளித்துள்ளனர். ஆனால் உடல் பரிசோதனை தொடர்பாக சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில், மருத்துவ பரிசோதனை முடிவடைந்து சென்னைக்கு வந்த பிறகு விசாரணைக்கு ஆஜராகுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எ.வ.வேலு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத லஞ்ச ஒழிப்பு போலீசார் எ.வ.வேலுவை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் பிறப்பித்தனர். </p>
<p>இந்த லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து எ.வ.வேலு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்காக எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே இதனை லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையேற்ற நீதிபதி, ஜூலை 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு எ வ வேலு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.</p>
<h2>உச்சநீதிமன்றத்தில் முறையீடு</h2>
<p>இந்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக முறையிடப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பாக வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத உச்சநீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு பிறகு விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.</p>
<p>இதனையடுத்து இன்று காலை எ.வ.வேலுவிற்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கு விசாரணையின் நடைபெற்றது. அதில் தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகியிருந்தார். எ.வ.வேலு லுக் அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பல முக்கிய விஷயங்களை அலசி ஆராயவில்லையென தெரிவித்தார். மேலும் எ.வ.வேலுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தப்பட இருப்பதாக தகவல் கிடைத்த உடன், உடனடியாக சிங்கப்பூருக்கு சிகிச்சை என்ற பெயரில் எ.வ.வேலு எஸ்கேப் ஆகிவிட்டதாக வாதிட்டார். எனவே இந்த வழக்கில் நிறைய சிக்கல் உள்ளது. எதையும் கவனத்தில் கொள்ளாமல் கைது செய்யக்கூடாது என உத்தரவும் லுக் அவுட் நோட்டீஸ் தடையும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்ததாக வாதிடப்பட்டது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/hSwwxGkGmWw?si=2or0aUUmcNqCF8Bh" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2>தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்</h2>
<p>இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவில் எந்த தவறு இருப்பது போல் தெரியவில்லையென தெரிவித்த நீதிபதிகள், லுக் அவுட் நோட்டீஸ்க்கு பிறப்பிக்கப்பட்ட தடையை அனுமதிக்கிறோம் என கூறி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p>
<p>மேலும் எ.வ.வேலுவின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவிட கோரிய தமிழக அரசின் மனுவையும் நிராகரித்த நீதிபதிகள், இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யுங்கள் என தெரிவித்து வழக்கு தள்ளுபடி செய்தனர். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/technology/is-your-wi-fi-very-slow-here-are-8-simple-ways-to-boost-the-speed-267564" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article