
<p><strong>Mayor Priya:</strong> சொத்து விவரங்களை காட்டாத கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.</p>
<h2><strong>ரூல்ஸை மதிக்காத மேயர் பிரியா..!</strong></h2>
<p>தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, மேயர் உட்பட சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ற 90 நாட்களுக்குள் தங்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து மற்றும் கடன் விவரங்களை மாநகராட்சியில் தாக்கல் செய்ய வேண்டும். அதோடு, பதவிக்காலத்தின் ஒவ்வொரு ஆண்டுதோறும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட்ட சொத்துக் கணக்கை, ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் சொத்து விவரங்களை மாநகர ஆணையரிடம் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும். தாக்கல் செய்யப்படும் சொத்து விவரங்கள் மாமன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பொது ஆவணமாக மாற்றப்படும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த விதியானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 மாமன்ற உறுப்பினர்களில் மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட பெரும்பாலானோர் சொத்து விவரங்களைச் சட்டப்படி சமர்ப்பிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/which-diabetes-is-more-dangerous-type1-or-type-2-health-details-in-pics-262964" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>சொத்து விவரங்களை வழங்காத 157 கவுன்சிலர்கள்:</strong></h2>
<p>ஆம் ஆத்மி கட்சியின் மாநில வழக்கறிஞர் அணியை சேர்ந்த சங்கர் என்பவர் கடந்த மார்ச் மாதம், மாமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழே கேட்டுள்ளார். தேர்தல் காரணமாக தாமதமாகி அண்மையில் தான் அந்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் 43 பேர் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை சமர்பித்துள்ளனர். அதாவது மேயர் பிரியா உள்ளிட்ட 157 பேர் தங்களது சொத்து விவரங்களை சமர்பிக்கவில்லை. இதனை முந்தைய ஆட்சியில் இருந்த திமுகவினரும் கண்டுகொள்ளவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/IAXPbak0sV8?si=c_GZsX26stcv5mxA" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2>விதிகளை மதிக்காதது ஏன்?</h2>
<p>இதுதொடர்பாக பேசிய வழங்கறிஞர் சங்கர், “உள்ளாட்சி அமைப்பின் சட்டதிட்டங்களை கவுன்சிலர்கள் மதிப்பதே இல்லை என்பதையே இந்த நிலை காட்டுகிறது. சட்டதிட்டங்களை கடந்து வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு தங்களின் நேர்மையை நிரூபிக்க சொத்து கணக்கை தாக்கல் செய்வது தார்மீக உரிமையும் கூட. ஆனாலும் இவர்கள் சொத்து விவரங்களை வெளியிடவில்லை என்றால், சட்டத்தின் முன் நிறுத்தி விசாரித்தால் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.</p>
<h2><strong>மேயர் பிரியா டிஸ்மிஸ்? கலையும் சென்னை மாமன்றம்?</strong></h2>
<p><strong>பதவி நீக்கம்: </strong>தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, பதவியேற்ற 90 நாட்களுக்குள் தங்களது மற்றும் குடும்பத்தினரின் சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் மக்கள் பிரதிநிதி என்ற தகுதியை இழந்து அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட நேரிடும்.</p>
<p><strong>சட்ட நடவடிக்கைகள்: </strong>சொத்துகள் தொடர்பான தவறான தகவல்களைத் தருவது அல்லது சொத்துகளை மறைப்பது நிரூபிக்கப்பட்டால், மாநில தேர்தல் ஆணையம் மூலமாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும்.</p>
<p><strong>நீதிமன்ற தலையீடு: </strong>சொத்துகளை மறைக்கும் உறுப்பினர்கள் மீது வருமான வரித்துறை (I-T Department) மூலமாக விசாரணை நடத்தப்படவும் வாய்ப்புள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் முந்தைய கவுன்சிலர்கள் மீது இது போன்ற வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.</p>
<p>அதன்படி, பெரும்பாலான உறுப்பினர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே சென்னை மாமன்றம் கலைக்கப்படவும் வாய்ப்புள்ளது.</p>
<p><a title="திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்" href="https://tamil.abplive.com/news/politics/bjp-condemns-tvk-headed-tn-govt-over-considerattion-of-dropping-smart-meter-scheme-central-govt-may-stop-5000-crore-fund-262981" target="_self">இதையும் படியுங்கள்: திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்</a></p>
<h2><strong>மேயர் பிரியா மீது விமர்சனம்</strong></h2>
<p>சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று சுமார் நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. 6 மாதங்களில் பதவிக்காலமே முடியவுள்ள நிலையில் இதுவரை சொத்து விவரங்களை அவர் வெளியிடவில்லை. அண்மையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> எம்.எல்.ஏவிற்கு குத்துவிளக்கு ஏற்க மறுத்ததோடு, அது தான் ரூல்ஸ் எனவும் பேசினார். எதிர்க்கட்சிகாரர்களுக்கு விதிகளை சொல்லி தரும் மேயர் பிரியாவிற்கு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் விதிதான் என்பது நான்கரை ஆண்டுகளாகியும் தெரியவில்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆளுங்கட்சியாக இருந்த திமுக இந்த தவறுகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்துள்ளது எனவும் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p>
Source: Read Full Article