
<p>பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை, தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், இன்று டெல்லி புறப்பட்டுச் சென்ற அண்ணாமலையிடம், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தனி கட்சி குறித்த கேள்வியை எழுப்பினர். அதற்கு அவர் என்ன பதிலளித்தார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.</p>
<h2>தனி கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை கூறியது என்ன.?</h2>
<p>டெல்லி செல்வதற்காக இன்று மாலை விமான நிலையம் சென்ற பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், அவர் தனி கட்சி தொடங்க உள்ளதாக பரவும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாக பதிலளிக்காத அண்ணாமலை, இரண்டு நாட்களில் ஊடகங்களை சந்திப்பதாகவும், அப்போது எல்லா கேள்விகளுக்கும் விடை அளிப்பதாகவும் கூறினார். தனி கட்சி தொடங்க உள்ள தகவலுக்கு அவர் மறுப்பும் சொல்லவில்லை.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu | BJP leader K. Annamalai leaves for Delhi from Chennai.<br /><br />When asked on speculations about him expected to launch a new party, he says, "Please wait. We will sit down and talk in two days" <a href="https://t.co/5qOZfp7OHD">pic.twitter.com/5qOZfp7OHD</a></p>
— ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2061403400290636087?ref_src=twsrc%5Etfw">June 1, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>இதில் மற்றொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அண்ணாமலை விமான நிலையத்திற்கு வரும் போது, அவரது காரில் பாஜக கொடி இல்லை என்பதுதான். இது, அவரது தனி கட்சி குறித்தான தகவல்களுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.</p>
<h2>பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தி.?</h2>
<p>பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியின் மேலிடத்தின் மீது அதிருப்தியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம், தேர்தலுக்கு முன்பாக, அதிமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக, இபிஎஸ்-க்கு ஆகாமல் இருந்த அண்ணாமலை, மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். அப்போதே அவரது அதிருப்தி தொடங்கிவிட்டது.</p>
<p>அது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது. தேர்தலில் 2 தொகுதிகளை அவரது பொறுப்பில் பாஜக தலைமை ஒப்படைத்தது. ஆனால், அந்த தொகுதிகளுக்கு அவர் செல்லவே இல்லை. பின்னர், பாஜக மேலிடம் அவரை டெல்லிக்கு அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது. அதன் பின்னர், சில தொகுதிகளில் மட்டும் அவர் பிரசாரத்தை மேற்கொண்டார்.</p>
<p>மேலும், அதனாலேயே அவர் தேர்தலிலும் போட்டியிடவில்லை என கூறப்பட்டது. அது குறித்து கேட்கப்பட்டதற்கும் அண்ணாமலை சரியாக பதிலளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்த பின்னர் அவர் மீண்டும் தலைமை பதவிக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக தலைமை அதையும் செய்யவில்லை. மேலும், தேர்தல் மற்றும் முடிவுகள் குறித்தும் கட்சிக்கு எதிரான சில கருத்துக்களை அண்ணாமலை பேசி வந்தார்.</p>
<p>அதோடு, இன்று டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.</p>
<h2>டெல்லியில் நிதின் நபின், அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்கும் அண்ணாமலை</h2>
<p>இதனால் விரக்தியில் இருக்கும் அண்ணாமலை, தனி கட்சியை தொடங்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இந்த சூழலில் தான் அவர் தற்போது 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபினையும், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/these-bad-evening-habits-after-seven-pm-increases-heart-attack-risk-262224" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article