உண்ணிகிருஷ்ணன் போத்தியுடன் என்ன தொடர்பு? - வைரல் வீடியோவால் சிக்கிய தசாவதாரம் நடிகர்!
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் நிலவும் பணமோசடி விவகாரம் தொடர்பாக, பிரபல தென்னிந்திய நடிகர் ஜெயராம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கேரளா மட்டுமன்றி தென்னிந்தியத் திரைத்துறையையே உலுக்கியுள்ள இந்த 'மெகா' ஊழல் வழக்கில், ஒரு முன்னணி நடிகரின் பெயர் அடிபடுவது 'பகீர்' கிளப்பியுள்ளது.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை ஏற்கனவே கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்த கோணத்தில் அமலாக்கத்துறை தனது 'ஆக்ஷனை'த் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சூழலில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகள் முராரி பாபு, சுதீஷ்குமார் உள்ளிட்ட 4 பேருக்குச் சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான உண்ணிகிருஷ்ணன் போத்தியுடன் நடிகர் ஜெயராமுக்கு இருக்கும் தொடர்பு குறித்து இ.டி. அதிகாரிகள் 'ஸ்கேனர்' வைத்துள்ளனர்.
ஏற்கனவே சென்னைக்கு வந்து நடிகர் ஜெயராமிடம் கேரள போலீஸார் ரகசிய விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது, ஜெயராமும் உண்ணிகிருஷ்ணன் போத்தியும் இணைந்து சிறப்புப் பூஜைகள் செய்யும் வீடியோ ஒன்று 'வைரல்' ஆனதுதான் இந்த விசாரணைக்கு அடிப்படையாக அமைந்தது. "வெறும் பூஜைக்காகச் சென்றாரா அல்லது தங்கம் கடத்தல் கும்பலுடன் ஏதேனும் 'டீலிங்' இருந்ததா?" என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அடுத்த வாரம் கொச்சி அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஜெயராமுக்கு 'அர்ஜென்ட்' சம்மன் பறந்துள்ளது.
தங்கம் திருட்டுப் போன விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியுள்ளதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், ஜாமீனில் வெளிவந்த 4 அதிகாரிகளிடமும் இ.டி. ஒரே நேரத்தில் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது. நடிகர் ஜெயராம் தரப்பிலிருந்து இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. "சட்டத்தின் முன் அனைவரும் சமம், உண்மையை வெளியே கொண்டு வருவோம்" என இ.டி. அதிகாரிகள் 'ஸ்ட்ராங்' ஆகத் தெரிவித்துள்ளனர். திரைத்துறை நட்சத்திரம் ஒருவர் ஆன்மீகப் புகலிடமான சபரிமலை தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருப்பது கேரளா அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
