நல்ல ஆட்சியும் இல்லை, நல்ல எதிர்க்கட்சியும் இல்லை” - நிர்வாகிகளுடன் கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.; செங்கோட்டையன் தான் தான் விலகக் காரணம் எனப் பரபரப்புப் பேட்டி!
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பானத் திருப்பமாக, வடசென்னை மாவட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.எஸ். பாபு, இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதிமுக-வின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி நிலவரங்கள் குறித்து அவர் முன்வைத்தக் கடுமையான விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
தவெக-வில் இணைந்த வி.எஸ். பாபு - பின்னணி:
சென்னை புரசைவாக்கம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.-வாக இருந்த வி.எஸ். பாபு, பின்னர் அதிமுக-வில் இணைந்து வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் பொறுப்பை வகித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்து, தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.எஸ். பாபு கூறியதாவது:
தலைமை மீது அதிருப்தி:
"தமிழகத்தில் தற்போது நல்ல ஆட்சியும் இல்லை, சரியான எதிர்க்கட்சியும் இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்கவில்லை. அதிமுக தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது.கடுமையான கூட்டணி என்று அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஆனால், மக்கள் அப்படிச் சொல்லவில்லை. கள நிலவரம் முற்றிலும் வேறாக இருக்கிறது."
செங்கோட்டையன் மீது புகார்:
"நான் அதிமுக-வில் இருந்து விலகி தவெக-விற்கு வர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஒரு முக்கியக் காரணம். அதிமுக-வின் தற்போதையச் செயல்பாடுகள் மனநிறைவைத் தரவில்லை. விஜய் அவர்களின் செயற்பாடுகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை பிடித்துள்ளதாலேயே, இந்தச் சூழ்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன் எனத் தெரிவித்தார்.
அரசியல் முக்கியத்துவம்:
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், அனுபவம் வாய்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவெக-வை நோக்கி வருவது விஜய் தலைமையிலானக் கட்சிக்குக் கூடுதல் பலத்தை அளித்துள்ளது. குறிப்பாக, வடசென்னையில் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட வி.எஸ். பாபுவின் வருகை, அந்தப் பகுதியில் தவெக-வின் அடித்தளத்தை வலுப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

