“25% சீட் இளைஞரணிக்கு; பஸ்ஸில் ஆடியோ செட், ஐஸ்கிரீம் எல்லாம் ரெடி!” - திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சுவாரஸ்யப் பேச்சு!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில், இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி. வெங்கடாசலம் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையாற்றினார்.
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் மறைமுகமாகக் குறிப்பிட்ட தோப்பு வெங்கடாசலம், "தவெக-விற்கு கவுண்ட்டர் கொடுக்கக்கூடிய சரியான கூட்டம் நம்மிடம் உள்ளது. நீங்கள் விசில் சத்தத்தைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள்" என்று தொண்டர்களிடையே பேசினார்.
"திமுக இளைஞரணிப் பதவி என்பது எவ்விதச் சிபாரிசும் இல்லாமல் உழைப்பால் கிடைக்கக்கூடியது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 100-ல் 25 சதவீத இடங்கள் இளைஞரணி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இளைஞரணி என்பது ஒரு ஆயுதம்; அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" எனத் தேர்தல் வியூகம் குறித்துத் தெரிவித்தார்.
கட்சிப் பணிகளை வேகப்படுத்த நிர்வாகிகளுக்குப் பல்வேறு சலுகைகளை அவர் அறிவித்தார். கட்சிப் பிரச்சாரத்திற்குச் செல்லும் பேருந்துகளில் ஆடியோ மற்றும் வீடியோ செட்களை அமைத்துத் தருகிறோம். நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பளிப்பாக வெள்ளை நிற டீ-சர்ட்கள் வழங்கப்படும். வேலை செய்பவர்களுக்கு ஐஸ்கிரீம் வேண்டுமானாலும் வாங்கித் தருகிறோம்" என ஜாலியாகவும் பேசினார்.
பேரறிஞர் அண்ணாவின் பெயரைச் சொல்லாமல் இன்று தமிழகத்தில் அரசியல் இல்லை. பதவி என்பது கட்சி கொடுப்பது, ஆனால் அந்தப் பதவியை வைத்துக்கொண்டு நாம் எப்படி 'ஸ்டாண்ட்' பண்ணிக்கொள்கிறோம் என்பது நமது திறமை. தலைவரின் கருத்துகளைக் கேட்டால்தான் முழுமையாகப் பணியாற்ற முடியும்" என்று அறிவுரை வழங்கினார்.
.png)