டெல்லி தமிழ் கல்விக்கழகத்தில் அதிரடி: செயலாளர் ராஜுவை நீக்கப் போட்டி பொதுக்குழுவில் தீர்மானம்!

₹12 கோடி கையாடல், சிபிஐ வழக்கு மற்றும் ஆசிரியர் நியமன முறைகேடு புகார்களால் 100 ஆண்டு கால கல்வி நிறுவனம் கடும் நெருக்கடி!

தலைநகர் டெல்லியில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டெல்லி தமிழ் கல்விக்கழகத்தின் (DTEA) நிர்வாகத்தில் நிலவும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்து, இன்று போட்டி பொதுக்குழு நடத்தப்பட்டது. இதில் தற்போது சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் நிர்வாகிகளை நீக்க ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தாத புகார்:

டெல்லி தமிழ் கல்விக்கழகத்தின் கீழ் 7 அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. வழக்கமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 2010-ம் ஆண்டு முதல் ராஜு என்பவர் தேர்தலை நடத்தாமல், கடந்த 15 ஆண்டுகளாகத் தன்னிச்சையாகச் செயலாளராக நீடித்து வருவதாகப் பெற்றோர்கள் மற்றும் உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிபிஐ விசாரணை மற்றும் நியமன முறைகேடுகள்:

தகுதியற்றவர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்களாக நியமனம் செய்தது தொடர்பாகச் செயலாளர் ராஜு மீது சிபிஐ (CBI) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்பாக, கடந்த 2025-ம் ஆண்டு முறைகேடாக நியமிக்கப்பட்ட 100 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என டெல்லி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்த ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

நிதி கையாடல் மற்றும் கடன் சுமை:

கல்விக்கழகத்தின் வங்கி கணக்கில் இருந்த ₹12 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நிர்வாகம் ₹2 கோடி ரூபாய் அளவில் கடனில் மூழ்கியுள்ளதாகவும் பொதுக்குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மொழி சிறுபான்மையின ஏழை மாணவர்களிடம் சேர்க்கைக்காக ₹2 லட்சம் வரை நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கப்படுவதாகவும் பெற்றோர் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி குறித்த சர்ச்சை:

செயலாளராக உள்ள ராஜு, 9-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் பியூனாகச் சேர்ந்தவர் என்றும், தற்போது இக்கல்வி நிறுவனத்தை அவரது குடும்பச் சொத்தாக மாற்றியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ள ராஜு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், சட்டவிரோத நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் இன்றைய பொதுக்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.






Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk