கொழும்பில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாதனை; தொடர்ந்து 3 வெற்றிகளுடன் 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதிரடி தொடக்க வீரர் இஷான் கிஷன் வெறும் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் (32), சிவம் துபே (27) மற்றும் திலக் வர்மா (25) ஆகியோர் முக்கியப் பங்களிப்பை அளித்தனர்.
176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 3 வீரர்கள் டக் அவுட் ஆன நிலையில், 4 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் கான் மட்டுமே அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார்; மற்ற எந்த வீரரும் 40 ரன்களைக் கடக்கவில்லை. இறுதியில், 18 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
இந்திய அணி தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள் மற்றும் 19 பவுண்டரிகளைப் பறக்கவிட்டது. ஆனால், பாகிஸ்தான் அணியால் வெறும் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது. பவுண்டரிகளை விட ரன் எடுக்காத பந்துகளே பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத பாகிஸ்தானுக்கு இது முதல் தோல்வியாகும். மறுபுறம், தொடர்ந்து 3 வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி, முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
.png)