பாதையை விட்டு விலகியது ராக்கெட்! தமிழிலும் விளக்கம் அளித்தார் இஸ்ரோ தலைவர்; 16 செயற்கைக்கோள்களின் நிலை என்ன?
பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் தனது பயணத்தின் இறுதி நிலையில் (PS3) திட்டமிட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றது என இஸ்ரோ தலைவர் நாராயணன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட், வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் திடீர் தொழில்நுட்பக் கோளாறு விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.ஆர்.டி.ஓ-வின் செயற்கைக்கோள் உட்பட 17 முக்கியச் செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்ற இந்த ராக்கெட்டின் நிலை குறித்து இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் அதன் செயல்பாடுகள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், "பி.எஸ்.எல்.வி. சி-62 பயணத்தின் போது PS3 இறுதியில் பாதையில் இருந்து விலகியது" எனத் தமிழில் உருக்கமாகப் பேசினார். ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் ஏற்பட்ட இந்தத் திசைமாற்றம் காரணமாகச் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.
ராக்கெட்டில் இருந்த 16-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் கதி என்ன? அவை மீண்டும் பெறப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், தற்போது பிற தரை கட்டுப்பாட்டு மையங்களில் (Ground Stations) இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்தத் தரவுகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டது குறித்த இறுதித் தகவல்களைத் தர முடியும் எனத் தெரிவித்தார். டி.ஆர்.டி.ஓ-வின் இ.ஓ.எஸ். என்-1 போன்ற முக்கியமான பாதுகாப்புத் துறை செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் இருந்ததால், இந்தத் தோல்வி அல்லது பின்னடைவு இந்திய விண்வெளித் துறைக்கு ஒரு சவாலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. முழுமையான அறிக்கைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
