ஆட்சியில் பங்கு விவகாரம்: ஐ. பெரியசாமிக்கு விரைவில் பதிலடி தரப்படும்! உண்ணாவிரதப் போராட்டத்தில் காங். தலைவர் ஆவேசம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சிதைக்க முயலும் பாஜக அரசைக் கண்டித்து, வரும் ஜனவரி 20-ஆம் தேதி கூடவுள்ள தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் முன்மொழியப்படும்” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், அத்திட்டத்தைப் பழையபடியே தொடர வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காங்கிரஸ் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய செல்வப்பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பாஜகவின் ‘பாசிச’ போக்கு மற்றும் திமுக அமைச்சரின் கருத்து குறித்துத் தனது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.
உண்ணாவிரத மேடையில் பேசிய செல்வப்பெருந்தகை, "மகாத்மா காந்தியின் பெயரைத் தாங்கிய 100 நாள் வேலைத் திட்டத்தை முற்றிலுமாக முடக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியுள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இந்த நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இத்திட்டத்தில் காந்தியின் பெயர் மீண்டும் இடம்பெற வேண்டும்; நிதி ஒதுக்கீட்டில் எந்தப் பின்னடைவும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தித் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்" என்றார். மேலும், "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இது குறித்துக் கோரிக்கை வைத்துள்ளோம். வரும் ஜனவரி 20-ஆம் தேதி கூடும் சட்டப்பேரவையில், 100 நாள் வேலைத் திட்டத்தைப் பாதுகாக்கவும், காந்தியின் பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்தார்.
கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிரிஷ் சோடகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஒருபுறம் குழு பேசிக்கொண்டிருக்கும்போது, மற்றொரு புறம் தன்னிச்சையாகக் கூட்டணி குறித்துப் பேசுவது கட்சி விரோதமானது; அப்படிப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார். "ஆட்சியில் பங்கு கிடையாது" என அமைச்சர் ஐ. பெரியசாமி கூறிய கருத்து குறித்துக் கேட்டபோது, "அவரது கருத்திற்குத் தகுந்த நேரத்தில் விரைவில் பதில் அளிக்கப்படும்" எனச் சுருக்கமாகக் கூறிவிட்டு நகர்ந்தார். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
.jpg)