திருமணத்தில் முடிந்த ஒரு காதலை பிரிக்க ஒரு குடும்பம் முயற்சிப்பதாக கூறப்படும் வழக்கில் ஒரு ஏடிஜிபியும், எம்.எல்.ஏ ஜெகன் மூர்த்தியும் சிக்கியிருப்பது தமிழ்நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து, சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டது. இந்த வழக்கில் நடந்த அடுத்தடுத்த திருப்பங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்
திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு அருகில் உள்ள களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வனராஜின் மகள் விஜயஸ்ரீ என்பவரை காதலித்து, பெண்ணின் பெற்றோர் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி, திருமணம் முடிந்த நிலையில், விஜயஸ்ரீயை களாம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்ததில் இருந்தே தனுசுக்கு பிரச்னை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே தனுஷை அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசிய பெண்ணின் தந்தையான வனராஜ், தனது மகளை தன்னுடன் அனுப்புமாறு மிரட்டியதாகவும், ஆனால் தனுஷ் மறுத்த நிலையில் மகளை மீட்க வனராஜ் தேர்தெடுத்த வழி தான் இப்போது ஏடிஜிபியையே கைது செய்யும் அளவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நள்ளிரவில் சிறுவன் கடத்தல்
தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்த வனராஜ்க்கு தேங்காய் ஏற்றுமதி தான் தொழில். இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கும் நெருக்கம் என்று கூறப்படுகிறது. எனவே அந்த தலைவர் செல்வாக்காக இருந்த போது தான் ஈட்டிய வருமானத்தின் ஒரு பகுதிக்கு வனராஜை பினாமியாக்கியதாக கூறப்படுகிறது. இவரும் கோடீஸ்வரர் என்பதால், அந்த தலைவரின் சொத்துகளுக்கு தனது மகள் விஜயஸ்ரீயை பினாமியாக்கியதாகவும், அவர்கள் எதிர்பார்க்காதது இந்த காதல் திருமணம் தான் என்றும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த அந்த தலைவர் டென்ஷனாக, எப்படியாது தனது மகள் விஜயஸ்ரீயை மீட்டே ஆக வேண்டும் என்று தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார் வனராஜ். அப்போது சென்னையில் அவர் நாடியது முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரைத்தான். அந்த முன்னாள் பெண் அதிகாரியே ஏடிஜிபி ஜெயராமை இதில் உள்ளே கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தலையீடு இல்லாமல் இந்த விவகாரத்தை முடிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்ய, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியையும் நாடியதாகவும் தெரியவந்துள்ளது. ஜெகன் மூர்த்தி, தன் ஆதரவாளர்கள் சிலரை தனுஷ் வீட்டுக்கு அனுப்பியதாகவும், அவர்கள் சென்ற போது தனுஷ் வீட்டில் இல்லாததால், அவரின் தம்பியை கடத்தியதாகவும் கூறப்படுகிறது.
சிக்கும் முக்கிய புள்ளிகள்
நள்ளிரவு நேரத்தில் அந்த கும்பல் தனுஷின் தம்பியான சிறுவனை கடத்திக் கொண்டு பூவிருந்தவல்லி அருகே பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெகன் மூர்த்தியே அங்கு நேரில் வந்து சிறுவனை மிரட்டியதாக கூறப்படும் நிலையில், இந்த பிரச்சனையை முடித்து விஜயஸ்ரீயை மீட்டு கொடுக்க ஜெகன் மூர்த்திக்கு 50 லட்ச ரூபாய் கைமாறியதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. சிறுவன் வீட்டில் இருந்து கடத்தப்பட்டவுடன் செய்வது அறியாது தவித்த அவரின் தாய், உடனடியாக 100 க்கு போன் செய்ய, காவல்துறை விசாரித்ததில் கடத்தலுக்கு பயன்படுத்த பட்ட காரில் ஒன்று காவல்துறை ஏடிஜிபி ஜெயராமுடையது என்றும் தெரியவந்துள்ளது. களாம்பாக்கத்தில் இருந்து, கடத்தி வரப்பட்ட சிறுவனை மீண்டும் பேரம்பாக்கம் வரை அழைத்து சென்று விட்டு வந்ததும் ஏடிஜிபியின் காரில் தான் என்பதை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறை கண்டுபிடித்துள்ளதாம். விவகாரம் தற்போது விபரீதம் ஆன நிலையில், போலீசாரின் அடுத்த விசாரணை அந்த தென் மாவட்ட தலைவரை நோக்கி திரும்பும் என்று கூறப்படுகிறது.
உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இதற்கிடையே ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கும் படி நீதிபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் அதற்கு மறுத்த நீதிபதி இவ்வழக்கை ஜூன் 16ம் தேதி தான் விசாரித்தார். இதற்கு ஏடிஜிபி ஜெயராம் ஏற்கனவே ஆஜரான நிலையில் தாமதமாக தான் கோர்டில் ஆஜரானார் ஜெகன்.
இதன்பிறகு, கூலிப்படையினர் யாரும் கடத்தலில் ஈடுபடுத்தப்படவில்லை. கூலிப்படையினரை ஈடுபடுத்தியதாக காவல் துறை கூறுவது தவறு என ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், ஜெகன்மூர்த்திக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது. இதுசம்பந்தமாக வழக்கறிஞர் சரத் குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்பதை தெளிவுப்படுத்தினர்.
பூவை ஜெகன்மூர்த்தியை எச்சரித்த நீதிபதி வேல்முருகன்
இதனையடுத்து பூவை ஜெகன்மூர்த்தியை நோக்கி நீதிபதி வேல்முருகன் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அவர், “கட்ட பஞ்சாயத்து செய்ய தான் உங்களுக்கு ஓட்டு போட்டார்களா? 58 வயது ஆன உங்களை காவல்துறை தினமும் கண்காணித்து கொண்டிருக்குமா? தவறு செய்யவில்லை என்றால் எதற்காக இரண்டாயிரம் பேரை சேர்த்து காவல்துறை விசாரணையை தடுத்தீர்கள்? உங்கள் கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் இல்லாத போது எதற்காக கட்சி உறுப்பினர்கள் இவ்வளவு பேர் கூடினார்கள் கட்சி தலைவரான நீங்களே காவல் விசாரணையை தடுப்பீர்களா? எம்எல்ஏவான நீங்கள் எதற்கு போலீஸ் விசாரணைக்கு செல்ல பயப்பட வேண்டும்? கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கொடுப்பது தான் உங்கள் பாலிசி என்றால் நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன். 200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். .ROLE MODEL ஆக இருக்க வேண்டிய நீங்கள், ஏன் கட்டப் பஞ்சாயத்து செய்தீர்கள்? யார் உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது? நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள். என கடுமையாக எச்சரிந்திருந்தார் நீதிபதி வேல்முருகன்.
ஏ.டி.ஜி.பி-யை கைது செய்ய நீதிபதி உத்தரவு
இந்த வழக்கு விசாரித்த நீதிபதி வேல்முருகன் ஏ.டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஜெகன் மூர்த்தியை நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியதும், ஏடிஜிபிஐ அதிரடியாக கைது செய்யச்சொல்லி உத்தரவிட்டதும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையொட்டி கேவி குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூவை ஜெகன் மூர்த்தி, ஜெயராம், மகேஸ்வரி ஆகியோரின் Call details எடுத்து வைத்து கொண்டு போலீசார் பல்வேறு கேள்விகளை தயார் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. அந்த கேள்விகளை முன்வைத்து பூவை ஜெகன் மூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஏடிஜிபி ஜெயராம் தான் பூவை ஜெகன் மூர்த்தி உதவியை நாடியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்த வாக்குமூலத்தை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
சிறுவன் கடத்தல் வழக்கில், திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, உறவினர்கள் மற்றும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார், புரோக்கர் போல செயல்பட்ட முன்னாள் போலீஸ் மகேஸ்வரி என 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கேவி குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி, ஐபிஎஸ் அதிகாரியான ஜெயராம் ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மகேஷ்வரியின் சொத்துக்கள் முடக்கம்
கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட மகேஸ்வரி குறித்து போலீசார் தங்களுடைய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இவர் தான் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இவரது பின்னணி குறித்து திருவாலங்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் மதுரையைச் சேர்ந்தவர். கொடைக்கானல் பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்ததாக தெரிகிறது. போலீஸ் அதிகாரிகள் சிலருடன் பழக்கம் காரணமாக வழக்குகள் சிலவற்றில் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மகேஸ்வரிக்கு சட்டவிரோத கும்பல்களுடன் தொடர்பு வைத்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில், கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதன் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை கணக்கெடுத்து அதனை முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கூட்டாளிகள் யார், யார் என்பது தொடர்பான பட்டியலை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
.
ஏ.டி.ஜி.பி மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு
சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதனையடுத்து, சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என கூறி, ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணியிடை நீக்கம் செய்தது ஏன்? என்று தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்தது. மேலும், சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஜெயராம் ஒத்துழைப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்க நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ததற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, விசாரணை முடியும் வரை பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளது. மேலும், விசாரணை முடிந்தவுடன் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைநீக்கம் ரத்து செய்ய முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போன்ற வேறு துறைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றவுள்ளதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், விசாரணையை ஒத்திவைத்துள்ளது
in
தமிழ்நாடு