சென்சார் கேமராக்கள் மூலம் காத்திருப்பு நேரம் குறையும்; நெரிசல் பகுதிகளை தானாகவே கண்டறிந்து செயல்படும்.
சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, சென்சார் கேமரா அடிப்படையில் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம், காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியதாக அமைக்கப்படும் சிக்னல்களில், சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்படும். இதனால், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிக்னல்களை அவை தானாகவே மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு சாலையில் வாகனங்கள் அதிகமாக இருந்தால், அதற்கேற்ப அந்தச் சாலைக்கு அதிக நேரம் சிக்னல் கிடைக்கும். அதேபோல், வாகனங்கள் குறைவாக இருந்தால், சிக்னல் நேரம் குறைக்கப்படும்.
இந்தச் சென்சார் கேமராக்கள், சாலைகளில் எத்தனை வாகனங்கள் செல்கின்றன, எந்த வேகத்தில் செல்கின்றன என்பதையும் துல்லியமாகப் பதிவு செய்யும் திறன் கொண்டவை. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, சிக்னல் நேரத்தை அதற்கு ஏற்ப சரிசெய்ய முடியும்.
மேலும், தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து போலீசாரும் ரிமோட் வழியாக சிக்னல்களை இயக்கும் வசதியும் இதில் உள்ளது. இது அவசர காலங்களில் அல்லது சிறப்பு தேவைகளின் போது போக்குவரத்தை சீர்படுத்த உதவும்.
இந்த புதிய தானியங்கி சிக்னல் அமைப்பு, பழைய சிக்னலுக்குப் பின்புறம் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்படும் கம்பங்களில் நிறுவப்படுகிறது. இது சென்னை சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைப்பதில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.