தமிழ்நாட்டில் முதன்முறையாக.. ஆன்லைன் ஊழியர்களுக்கு மாநகராட்சி கொடுத்த சர்ப்ரைஸ்!
ஆன்லைன் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நலன் கருதி சென்னை மாநகராட்சி அவர்களுக்கான ஓய்வறையை அமைத்துள்ள நிலையில், இத்திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆன்லைனில் வேலை என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. படித்த படிப்புக்கான வேலையை தான் செய்வேன் என்று காத்திருந்த இளைஞர்களுக்கு கையில் செல்போனும், பைக்கும் இருந்தால் போதும், அவர்களுக்கான வருவாயை அவர்களே ஈட்டலாம். இதுபோன்ற ஆன்லைன் வேலைகள் பெரும்பாலானவர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது. சொமேட்டோ , ஸ்விக்கி போன்ற ஆன்லைன் வேலை நிறுவனங்களில் ஆண், பெண் பேதமின்றி அனைத்து தரப்பினரும் வேலை செய்து வருகின்றனர்.
இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆன்லைனில் ஸ்விக்கி,சொமேட்டோ, ஓலா, ஊபர், ரேபிடோ, செப்டோ, பிளிங்கிட் போன்ற பல்வேறு தளங்களில் தங்களுக்கான வருவாய் ஈட்டி வருகின்றனர். இதுபோன்று வேலையை செய்து வருபவர்கள் நாளுக்கு நாள், பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். வெயில், மழை பார்க்காது உழைக்கும் இவர்களுக்கு அவர்கள் சார்ந்த நிறுவனம் பல சலுகைகள் அளித்தாலும், அரசு சார்பில் உதவிகள் கிடைப்பது அரிதாகவே காணப்படுகிறது. இதுபோன்ற சூழலில், தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்க்கு ஏசி ஓய்வறையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்த திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களை கூட பொருட்படுத்தாமல், தங்களின் பொருளாதார சூழ்நிலையை உயர்த்தும் எண்ணத்தில் டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் உள்ளதால் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது. ஓய்வு எடுக்க இடமில்லாமல், சாலை ஓரங்களில் கூடுகிறார்கள். இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையின் முக்கிய சாலைகளில்,ஏசி ஓய்வறையை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது.
இதில் 600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஓய்வறையில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும், மேலும் 20 டூவிலர் வரை பார்க்கிங் செய்யும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், அண்ணா நகர், கே.கே.நகரில் விரைவில் திறக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி. நகர் போன்ற பகுதிகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
in
தமிழகம்