சேலம்:
சேலம் அருகே மாமியாரை அடித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட மருமகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், குரும்பப்பட்டி கிராமம், தானமூர்த்தியூரில் வசித்து வருபவர் எல்லப்பன் மனைவி தைலம்மாள் (75). இவருக்கு 3 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தைலம்மாளின் கடைசி மகனான ஓட்டுநர் மெய்வேலின் மனைவி செல்விக்கும் மாமியார் தைலமாலுக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடங்கி, தெருவில் தண்ணீர் பிடிப்பது வரை வாய் தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் தண்ணீர் பிடிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சண்டை சூடுபிடித்து கைகலப்பாக மாறியுள்ளது.
மேலும், இதன் காரணமாக ஆத்திரமடைந்த மருமகள் செல்வி, மாமியார் தைலம்மாளை மண்வெட்டி கைப்பிடியால் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த தைலம்மாள் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிருக்கு போராடியுள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த கடைசி மகன் மெய்வேல் தாயாரின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று பார்த்த போது தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி வந்ததை கண்டார். பின்னர் மெய்வேல் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து தனது தாயை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய நிலையில், கொலை செய்த மெய்வேலின் மனைவி செல்வி போலீசுக்கு பயந்தும், துக்கம் தாங்காமலும் அவரது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இறந்து போன மாமியார் மருமகள் இருவரது உடல் பிரேத பரிசோதணைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
– Geetha Sathya Narayanan