
<p>புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் கோயிலில் பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<h2>அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு</h2>
<p>விநாயகர் சதுர்த்தி நாளில் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து மூலவரான மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவர் விநாயகருக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, வண்ண விளக்குகள் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் விநாயகர் சதுர்த்தி நாளில் மணக்குள விநாயகர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததுள்ளனர்.</p>
<h2>தனிநபர் அர்ச்சனை, விசேஷ பூஜைகள் ரத்து</h2>
<p>விநாயகர் சதுர்த்தி நாளில் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில், தனிநபர் அர்ச்சனை மற்றும் விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து பக்தர்களும் ஒரே முறையில் சாமி தரிசனம் செய்யும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயில் வளாகத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.</p>
<h2>16 ஆயிரம் லட்டுகள் தயார்</h2>
<p>விநாயகர் சதுர்த்தி நாளில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, இடைவிடாமல் லட்டு பிரசாதம் வழங்குவதற்காக சுமார் 16 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தரிசனம் முடித்து வெளியேறும் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<h2>காலை முதல் இரவு வரை தரிசனம்</h2>
<p>பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், பிற்பகல் 2 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் மதியம் 3 மணிக்கு மீண்டும் பூஜைகளுடன் நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை முதலே கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும்.</p>
<h2>விஐபி., சிறப்பு தரிசனத்துக்கு தனி வழி</h2>
<p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, விஐபி.க்கள் தரிசனம் செய்வதற்கு தனி வழியும், சர்வ திவ்ய தரிசனத்துக்கு தனி வழியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் கூட்டத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்த்து, ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<h2>ரூ.100 கட்டணத்தில் சிறப்பு தரிசனம்</h2>
<p>இந்து அறநிலையத்துறை அனுமதியுடன், விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டும் தனிநபர் கட்டண சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 10 வயதுக்குள்பட்ட சிறுவர்களைத் தவிர்த்து, தனிநபருக்கு ரூ.100 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. <a title="விநாயகர் சதுர்த்தி" href="https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026" data-type="interlinkingkeywords">விநாயகர் சதுர்த்தி</a> விழாவை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் நடைபெறும் சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளை காணவும், சாமி தரிசனம் செய்யவும் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இதையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அனைவரும் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் தரிசனம் செய்து செல்லவும் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
Source: Read Full Article