
<p><span dir="auto">இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேற்று கீவ் நகரில் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார். அப்போது, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த உக்ரைனின் கவலைகளை ஜெய்சங்கர் ஏற்றுக்கொண்டார். அதே நேரம், இந்தியாவுக்கும் எரிசக்தி தேவைகள் உள்ளன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.</span></p>
<h2><span dir="auto">உக்ரைன் வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப்பின் ஜெய்சங்கர் கூறியது என்ன.?</span></h2>
<p><span dir="auto">உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "இந்த கேள்வியை கேட்பதற்கான காரணத்தை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி நிலைமை மிகவும் கடினமாக இருக்கும் இக்காலத்தில், 140 கோடி மக்களுக்கு எரிசக்தியை வழங்குவதில் உள்ள சவால்களை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன்," என்று ஜெய்சங்கர் கூறினார். உக்ரைனின் நிலைப்பாட்டை இந்தியா மதிப்பதாகவும், தங்களது கண்ணோட்டமும் மதிக்கப்படும் என்று நம்புவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.</span></p>
<div class="mid-taboola">
<h2 id="taboola-mid-article-personalisation-3184109" class="trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget"><span dir="auto">ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஜெய்சங்கர் என்ன கூறினார்.?</span></h2>
</div>
<p><span dir="auto">ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக பேசிய ஜெய்சங்கர், "இன்று ஐந்தாவது ஆண்டில் இருக்கும் இந்த மோதல், யாரோ ஒருவர், எண்ணெய், கனிமங்கள், உலோகங்கள் அல்லது உரங்களை வாங்குவதால் மட்டும் தீர்க்கப்பட்டுவிடாது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் கூற விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். சமாதான முயற்சிகள் இருந்தபோதிலும், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்கிறது என்றும், அது இப்போது ஐந்தாவது ஆண்டில் உள்ளது என்றும் அவர் கூறினார். இறுதியில், இதை தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம் மற்றும் சமரசம் தேவைப்படும் என்று தெரிவித்தார்.</span></p>
<p><span dir="auto">மேலும், "இப்போது விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,"</span><br /><span dir="auto">என்று அவர் கூறினார். "இது போருக்கான நேரம் அல்ல என்றும், போர்க்களத்தில் இருந்து தீர்வுகள் உருவாகாது என்றும் இந்தியா எப்போதும் கூறிவருகிறது." பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின்போது, பிரதமர் </span><span dir="auto">நரேந்திர மோடி</span><span dir="auto"> தெரிவித்த கருத்துக்களை அவர் குறிப்பிட்டார். நீண்டகாலப் போருக்கு பதிலாக, இப்போது விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அப்போது பிரதமர் கூறியிருந்தார்.</span></p>
<p><span dir="auto">2022-ல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, மாஸ்கோவிலிருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வதற்காக, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தனது குடிமக்களுக்கு மலிவான மற்றும் நம்பகமான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது தனது முக்கிய பொறுப்பு என்று புதுடெல்லி பலமுறை கூறியுள்ளது.</span></p>
<p><span dir="auto">உக்ரைன் பயணத்தின் போது, ஜெய்சங்கர் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா ஆகியோரைச் சந்தித்தார். அப்போது, போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.</span></p>
<p> </p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/8-symptoms-of-vitamin-and-protein-deficiency-in-our-body-273456" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article