
<p>தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, சனிக்கிழமையன்று, அங்கு நடிகர் அஜித் கலந்துகொள்ளவிருந்த கார் பந்தயம் நடைபெறும் மைதானத்திற்கு சென்ற அவர், அஜித்துடனான உற்சாகமான சந்திப்பிற்குப் பிறகு, அவர் கலந்துகொண்ட கார் பந்தயத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இன்று முதலீடுகள் தொடர்பான சந்திப்புகளுக்குப் பின், ஒரே நாளில் 12,300 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.</p>
<h2>சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு - 7,000 வேலைவாய்ப்புகள்</h2>
<p>இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு - 2,000-க்கும் மேல் உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள்</h2>
<p>மற்றொரு பதிவில், தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.</p>
<p>சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p>
<p>மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்கள் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-ன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ ரூ.300 கோடி முதலீடு - 400 புதிய வேலைவாய்ப்புகள்</h2>
<p>தொடர்ந்து மற்றுமொரு பதிவில், இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் திரு. ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் திரு. டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோரால் கையெழுதிடப்பட்டு, ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/rice-or-roti-which-one-provides-more-energy-know-details-274507" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
Source: Read Full Article