
<p>மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா – விரிவான முன்னேற்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.</p>
<div dir="auto"><strong>மகா கும்பாபிஷேகப் பெருவிழா</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் உலகப் பிரசித்தி பெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் 17.09.2026 வியாழக்கிழமை அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் அனைத்து கோபுரங்கள் மற்றும் விமானங்களில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 06.09.2026 அன்று தொடங்கி 16.09.2026 வரை நடைபெற்று வருகின்றன. வருகின்ற 16.09.2026 அன்று காலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள் பரிவார தெய்வங்கள் மற்றும் உபசன்னதிகளுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான 17.09.2026 அன்று அதிகாலை 4.00 மணிக்கு மகாபூரணாஹுதியும் கடம்புறப்பாடும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை மூலஸ்தான அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதியம் கோயில் நடை சாத்தப்படாமல் காலை 10.00 மணி முதல் பொதுமக்கள் தொடர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் அன்றிரவு 7.00 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் அருள்மிகு சுவாமி, அம்மன் திருவீதி உலா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>அனுமதிச் சீட்டு (Pass) வைத்திருப்பவர்களுக்கான வழிகாட்டுதல்:</strong> </div>
<div dir="auto">பாதுகாப்பு நெறிமுறைகளின்படி செல்லுபடியாகும் அனுமதி அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே காலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை திருக்கோயில் மேல்தளத்திற்கு அனுமதிக்கப்படுவர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வண்ண அனுமதி அட்டைகளின்படி ஒதுக்கப்பட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">● பச்சை நிற அட்டை: நவீன் பேக்கரி சந்திப்பு, மீனாட்சி கார் பார்க்கிங், கிழக்கு சித்திரை வீதி கேங்வே (Gangway) வழியாக அம்மன் கிழக்கு கோபுரம்.</div>
<div dir="auto">● மஞ்சள் நிற அட்டை: வடக்கு ஆவணி மூல வீதி, தியாகி தாயம்மாள் தெரு, வடக்கு சித்திரை வீதி கேங்வே வழியாக வடக்கு கோபுரம் மற்றும் நந்தவனப் படிகள்.</div>
<div dir="auto">● சிவப்பு நிற அட்டை: மேற்கு ஆவணி மூல வீதி, பெரிய வளையல்காரத் தெரு, மேற்கு சித்திரை வீதி கேங்வே வழியாக மேற்கு கோபுரம் மற்றும் மேற்கு 5 நிலை கோபுர உட்புற படிகள்.</div>
<div dir="auto">● பழுப்பு நிற அட்டை: வடக்கு ஆவணி மூல வீதி, மேல பட்டமார் தெரு, வடக்கு சித்திரை வீதி கேங்வே வழியாக வடக்கு கோபுரம் மற்றும் நந்தவனப் படிகள்.</div>
<div dir="auto">● நீல நிற அட்டை: தெற்கு ஆவணி மூல வீதி, தெற்கு காவல்கூட தெரு, தெற்கு சித்திரை வீதி கேங்வே வழியாக தெற்கு கோபுரம் மற்றும் தெற்கு ஆடி வீதிப் படிகள்.</div>
<div dir="auto">● ரோஸ் நிற அட்டை: தெற்கு ஆவணி மூல வீதி, மீனாட்சி அம்மன் கோயில் தெரு, சோதனைச் சாவடி, தெற்கு சித்திரை வீதி கேங்வே வழியாக கிழக்கு அம்மன் கோபுரம் மற்றும் வன்னி விநாயகர் சன்னதி எதிரில் உள்ள படிகள்.</div>
<div dir="auto">● ஊதா நிற அட்டை: நவீன் பேக்கரி சந்திப்பு, மீனாட்சி கார் பார்க்கிங், தெற்கு சித்திரை வீதி கேங்வே வழியாக கிழக்கு ராஜகோபுரம். </div>
<div dir="auto">கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும் அனுமதி அட்டைதாரர்கள் அண்ணாகுழி மண்டப தெரு, தெற்கு காவல்கூட தெரு, பழைய சென்ட்ரல் மார்க்கெட் சந்து வழியாக ஆவணி மூல வீதியைச் சென்றடைந்து வெளியேற வேண்டும்.</div>
<div dir="auto">பொதுமக்கள் தரிசன வழிகள் மற்றும் கட்டுப்பாடுகள்: </div>
<div dir="auto">கும்பாபிஷேக நிகழ்வின் போது பொதுமக்கள் நான்கு ஆவணி மூல வீதிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்; காலை 10.00 மணி வரை சித்திரை வீதிகளில் அனுமதி அட்டை இல்லாத பொதுமக்கள் நிற்க அனுமதி இல்லை. பழைய, பாழடைந்த கட்டடங்களின் மேற்கூரைகளில் நின்று நிகழ்வைப் பார்ப்பது உயிருக்கு ஆபத்தானது என்பதால் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது; தடையை மீறினால் கட்டட உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். </div>
<div dir="auto">காலை 10.00 மணிக்கு மேல் பொதுமக்கள் தரிசனத்திற்காக தெற்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரம் வழியாக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். தரிசனம் முடிந்த பின் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படுவர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>போக்குவரத்து மாற்றங்கள், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் பார்க்கிங்:</strong></div>
<div dir="auto">16.09.2026 மாலை முதல் 17.09.2026 இரவு வரை சித்திரை, ஆவணி மூல மற்றும் மாசி வீதிகள் வாகன நிறுத்தமில்லா பகுதிகளாக (No Parking Zone) அறிவிக்கப்பட்டுள்ளன. கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் நுழையாமல் சுற்றுச்சாலை வழியே திருப்பிவிடப்படும். பக்தர்களின் வசதிக்காகப் பழங்காநத்தம் சி2 ரவுண்டானா, எல்லீஸ் நகர், வெஸ்டன் பார்க் ஹோட்டல், கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் தெப்பக்குளம் 16-கால் மண்டபம் ஆகிய 5 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்த தமுக்கம் மைதானம், காந்தி அருங்காட்சியகம், மதுரை கல்லூரி, எல்லீஸ் நகர், காமராஜர் சாலை, தெப்பக்குளம் உள்ளிட்ட மாநகரின் 55-க்கும் மேற்பட்ட இடங்களில் விரிவான வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் திருக்கோயில் வழித்தடங்களை எளிதில் அறிய முக்கிய சந்திப்புகளில் QR குறியீட்டுடன் கூடிய அறிவிப்புப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. </div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள்: </strong></div>
<div dir="auto">விழா நாளன்று பக்தர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்களும், 12 ஆம்புலன்ஸ் ஊர்திகளும் (ALS, BLS, பைக் ஆம்புலன்ஸ்), 70 மருத்துவர்கள் மற்றும் 150 துணை மருத்துவப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். ராஜாஜி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சியின் சார்பில் 17 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், 26 குடிநீர் தொட்டிகள் மற்றும் 225 நிரந்தர கழிப்பறைகளுடன் கூடுதலாக 100 நபர்கள் பயன்படுத்தும் வகையில் 16 தற்காலிகக் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு, 264 தூய்மைப் பணியாளர்கள் 3 சுழற்சிகளில் பராமரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். திருக்கோயில் வளாகத்தில் 13 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் மற்றும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க சித்திரை வீதிகளில் தேங்காய் நார் தரைவிரிப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயில் சார்பில் வருகை தரும் பக்தர்களுக்கு 2 லட்சம் பிரசாத பைகள் (மஞ்சள், குங்குமம், விபூதி, தண்ணீர், பிஸ்கட்) வழங்கப்படவுள்ளன.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு: </strong></div>
<div dir="auto">பாதுகாப்புப் பணியில் 400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 10 நீர்தாங்கி ஊர்திகள் மற்றும் அவசரகால மீட்பு ஊர்திகளுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பழைய சென்ட்ரல் மார்க்கெட் சந்து, அன்னக்குழி மண்டபம் வீதி, தெற்கு காவல்கூட வீதி ஆகியவை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு </div>
<div dir="auto"> </div>
<div dir="auto">வாகனங்களுக்கான பிரத்யேக அவசரகாலப் பாதைகளாகப் (Sterile Zone) பராமரிக்கப்படும். குற்றத் தடுப்பு நடவடிக்கையாக நகரின் 70 இடங்களில் முக அடையாளம் காணும் அதிநவீன கேமராக்கள் (FRS) மற்றும் திருக்கோயிலைச் சுற்றி 433-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>நேரலை மற்றும் கட்டுப்பாட்டு அறை: </strong></div>
<div dir="auto">பக்தர்கள் நெரிசலின்றி குடமுழுக்கைக் காணும் வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், பார்க்கிங் பகுதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் 51 எல்.இ.டி (LED) திரைகள் அமைக்கப்பட்டு நேரலை செய்யப்படுவதுடன், தொலைக்காட்சிகள் மற்றும் திருக்கோயில் யூடியூப் (YouTube) பக்கத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அனைத்துத் துறை பணிகளையும் ஒருங்கிணைக்கப் புதுமண்டபத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, <a href="tel:(800)%20425-6781" target="_blank" rel="noopener">1800-425-6781</a> மற்றும் <a href="tel:(800)%20425-6782" target="_blank" rel="noopener">1800-425-6782</a> ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் (Toll-Free Numbers) பொதுமக்களின் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி விழாவினைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</div>
Source: Read Full Article