
<p style="text-align: justify;">திருவள்ளூர் நகராட்சியில் சேகரமாகும் ஹோட்டல் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 100 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சியின் 27 வார்டுகளில் 19,022 வீடுகள், 3,125 கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. இங்கு மொத்தம் 82,185 பேர் வசித்து வருகின்றனர். வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து தினமும் 10.81 டன் மக்காத குப்பை, 13.85 டன் மக்கும் குப்பை என மொத்தம் 24.66 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றில் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு வருகின்றன.</p>
<h3 style="text-align: justify;">4.7 ஏக்கர் பரப்பளவில் புதிய திட்டம்</h3>
<p style="text-align: justify;">நகராட்சியில் சேகரிக்கும் குப்பையை தரம் பிரித்து உரமாக மாற்ற, கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில் 4.7 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில்தான் ஹோட்டல் மற்றும் இறைச்சி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் தனியார் வங்கி சமூக பங்களிப்பு (CSR) வாயிலாக ரூ.1.70 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ளது.</p>
<h3 style="text-align: justify;">மின்சாரம் தயாரிக்கும் முறை</h3>
<p style="text-align: justify;">இதுகுறித்து நகராட்சி கமிஷனர் தாமோதரன் கூறுகையில், திருவள்ளூர் நகராட்சியில் உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதற்காக நுங்கம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் மின்சாரம் தயாரிக்க, உயிர் வாயு மற்றும் இயற்கை உர ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதற்காக 8 டன் கொள்ளளவு உடைய கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">சேகரமாகும் உணவுக் கழிவுகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் கொட்டி அரைக்கப்பட்டு, 'கன்வேயர் பெல்ட்' வாயிலாக செரிமான தொட்டிக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து அரைக்கப்பட்ட குப்பை கூழாக மாற்றப்பட்டு, 5 டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கலனிற்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படும். அந்த சேமிப்பு கலனில் சேகரமாகும் கூழில் இருந்து மீத்தேன் வாயுவாக உருமாற்றப்படும். அந்த வாயு மின்சாரமாக உற்பத்தியாகி, அருகில் உள்ள மின்சேமிப்பு கலனிற்கு பேட்டரி மூலம் கொண்டு செல்லப்பட்டு மின்சாரமாக சேமிக்கப்படும்.</p>
<h3 style="text-align: justify;">விரைவில் பயன்பாட்டிற்கு வரும்</h3>
<p style="text-align: justify;">இவ்வாறு குப்பை கழிவுகளில் இருந்து தினமும் 100 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். அந்த மின்சாரத்தை குப்பை கழிவை அரைப்பதற்கும், திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் உள்ள மின்விளக்குகள் மற்றும் அருகில் உள்ள நுங்கம்பாக்கம் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் எரியவும் பயன்படுத்தலாம். இத்திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.</p>
<p style="text-align: justify;">இத்திட்டம் செயல்படுத்துவதன் வாயிலாக திருவள்ளூர் நகரில் உணவகங்கள் மற்றும் இறைச்சி கழிவுகள் தொடர்ந்து சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இதன் மூலம் நகரும் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இறைச்சி கழிவுகள் மின்சாரமாக மாற்றப்பட்டு, நகரம் தூய்மையாக பராமரிக்கப்படும் என்று அவர் கூறினார்.</p>
Source: Read Full Article