
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: காவிரி டெல்டா சம்பா பாசனத்திற்காக இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இதனால் சம்பா பாசனத்தை மேற்கொள்ளவே முடியாது என்று விவசாய சங்க தலைவர்கள் கடுமையாக குற்றம் சாட்டினர்.</p>
<p style="text-align: justify;"><strong>கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்</strong> கூறுகையில், இன்று கல்லணையில இருந்து பாசன டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டு இருக்காங்க. இந்த தண்ணீர் வந்து கடைமடை பாசன பகுதி வரை சென்று அடைய வேண்டும். இங்கு 2,000 கன அடி தண்ணீர் தான் வந்து இருக்கு. இந்த தண்ணீரை வச்சு முழுமையாக விவசாயிகள் சாகுபடி பணிகளை செய்ய முடியாது. கர்நாடகத்தில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும். தொடர்ந்து சம்பா சாகுபடிக்கு தடையில்லாமல் தண்ணீ கொடுக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/06/170a416959fcc061596fccf9be68d1351788698546665733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">அதேபோல இன்னைக்கு உர விலை பன்மடங்கு உயர்ந்து போய் நிக்குது. விவசாயிகளோட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கு. அதனால உரத்தை மானியமாக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். அதேபோல கடந்த காலங்களில் சம்பா தொகுப்புத் திட்டம் அறிவிச்சாங்க. இப்போது அந்த சம்பா தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படல. உடனடியாக சம்பா தொகுப்புத் திட்டம் அறிவிச்சு விவசாயிகள் எல்லாருக்கும் அந்த தொகுப்புத் திட்டம் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். 45 நாளைக்கு தண்ணீர் விடுவோம் என்பது ஏற்புடையது அல்ல. ஜனவரி 28 வரைக்கும் நமக்கு முழுமையா தண்ணீர் வந்தால் தான் சம்பா சாகுபடி மேற்ொண்டு முழுமையான அறுவடை செய்ய முடியும். இல்லைன்னா விவசாயியோட வாழ்வாதாரம் கேள்விக்குறியா போயிடும். முறைவைத்து தண்ணீர் விட்டால் எவ்வித பயனும் இல்லை. குறுவையும் பாதிக்கப்பட்டு போயிடுச்சு... சம்பாவும் பாதிக்கப்படுற சூழ்நிலை வந்துருச்சுன்னா விவசாயிகளால எதுவும் தாங்க முடியாது என்றார்.</p>
<p style="text-align: justify;"><strong>விவசாய சங்க நிர்வாகி ஜீவகுமார் கூறியதாவது:</strong> மேட்டூர் அணை வரலாற்றில் 4-வது முறையாக தற்போது செப்டம்பர் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சம்பா என்பது நீண்ட கால பயிராகும். அதற்கு 45 நாள் தண்ணீர் திறந்து விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது . குறைந்தது 150 நாட்களுக்காவது தண்ணீர் தேவைப்படும் . எனவே பயிருக்கு தேவையான அளவில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும். முறைப்பாசனம் வைக்க கூடாது.</p>
<p style="text-align: justify;">உரம், விதை நெல் தடை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . கடைமடை வரை தண்ணீர் சென்று சேர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக கர்நாடக விடமிருந்து நமக்கு உரிய நீரை கேட்டு பெற வேண்டும் . மாதந்தோறும் நமக்கு தர வண்டிய நீர் மற்றும் பற்றாக்குறை நீரை போர்க்கால அடிப்படையில் பெற வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்களை எந்தவித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.</p>
<p style="text-align: justify;"><strong>தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் முகமது இப்ராஹிம் கூறுகையில்,</strong> தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவு போதாது. கர்நாடகாவிடம் இருந்து நமக்குரிய நீரை கண்டிப்பாக பெறவேண்டும். கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சாகுபடி பொய்த்து போய் விவசாயிகள் பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில் தற்போது சம்பா சாகுபடி இந்த தண்ணீர் போதுமானதாக இருக்காது. இதனால் மேலும் விவசாயிகள் கடனாளிகள்தான் ஆகும் நிலை ஏற்படும். எனவே இது போன்ற சூழல் ஏற்படுவதற்கு முன்பு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய தண்ணீரை பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.</p>
<p style="text-align: justify;"><strong>தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்,</strong> காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணை நேற்று திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரைக் கொண்டு சம்பா சாகுபடி என்பது கேள்விக்குறிய விஷயமாக உள்ளது. உடனடியாக தமிழக அரசு சட்டரீதியாக கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்தில் கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்க அமைப்புகள் உள்ளிட்ட கூட்டத்தை நடத்தி தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். டெல்டா மாவட்ட மக்களின் பிரச்சினையாக மட்டும் காவிரி நதிநீரை பார்க்க முடியாது. பல்வேறு மாவட்டங்களுக்கு குடிதண்ணீர் ஆதாரமாக இருந்து வருகிறது என்பதையும் கணக்கில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம் என்றார்.</p>
<p style="text-align: justify;"><strong>காவிரி விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன்</strong> கூறுகையில், கல்லணையில இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது 7,000 கனஅடி மட்டும்தான் தண்ணீர் திறந்து உள்ளார்கள். இது எந்த வகையிலயும் எந்த பயனும் இல்லை. இது தமிழக அரசு செய்த முதல் தவறு. குறைந்தபட்சம் 15,000 கனஅடி தண்ணி திறக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் கடைமடை வரை சென்று சேரும்.</p>
<p style="text-align: justify;">தற்போது இவர்கள் 7,000 கனஅடி திறந்து இருக்கிறது எந்த வாய்க்கால்களிலும் போய் தண்ணி சேராது. அதுமட்டுமில்லாமல், இப்போதைக்கு இங்கு திறந்து இருக்கும் தண்ணீர் குடிநீர் குழாய்களுக்கு கூட சென்று அடையாது. தற்போது கல்லணை, காவிரியில் 8,000 கனஅடி திறக்க வேண்டும். வெண்ணாத்துல 8,000 கனஅடி திறக்க வேண்டும். கல்லணை கால்வாயில் 8,000 கனஅடி திறக்க வேண்டும். அப்படி திறந்தால் தன் கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும். ஒரு ஆறு, குளம் நிரப்ப வேண்டும் என்றால் இந்த மாதிரி முழு கொள்ளளவு திறக்க வேண்டும். தமிழக அரசு தற்போது செய்தது தவறான நடவடிக்கை. இதை நம்பி விவசாயிகள் எல்லாம் நாற்று விட தொடங்கி விட்டார்கள். 45 நாளைக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது என்பது தவறான விஷயம். விவசாயிகளை நஷ்டத்துக்கு கொண்டு போறதுதான் இந்த செயல் என்றார்.</p>
<p style="text-align: justify;"><strong>தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்</strong> கூறுகையில், டெல்டாவை பொறுத்தவரைக்கும் இது ஒரு மகிழ்ச்சியான நாள்னுதான் சொல்லணும். ஏன்னா கல்லணை திறக்குறதுங்கிறது எப்போதுமே விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் நாள். ஆனா என்ன முக்கியமான விஷயம்னா ஜூன் மாசம், கிட்டத்தட்ட ஒரு 80 நாட்களுக்கு பிறகு திறக்குறதுதான் வருத்தமா இருக்கு.</p>
<p style="text-align: justify;">மேட்டூரை பொறுத்தவரைக்கும் 55 டி.எம்.சி. தான் தண்ணி இருக்கு. 93 டி.எம்.சி. தண்ணி இருந்தாதான் முழுசா கொள்ளும். ஆனா 55 டி.எம்.சியை வச்சு ஒரு 45 நாளுக்கு தண்ணி தரேன்னு ஒரு சிஸ்டம் போடுறது வந்து பொருத்தமா இருக்காது. ஏன்னா ஏற்கனவே குறுவையில மிகப்பெரிய பாதிப்பை சந்திச்சு, இப்ப சம்பாவாவது செய்வோம்னா... செய்ய முடியுமா, செய்ய வேண்டாமாங்கிற ஒரு உத்தரவாதம் இல்லாத ஒரு சூழ்நிலை. 45 நாள்ங்கிறது தவிர்க்கப்படனும். இன்னைக்கு இங்க இருக்க உரங்கள் இல்லை, விதை இல்லை, பல்வேறு விஷயங்களும் பிரச்சனையா வந்துகிட்டு இருக்கு. மத்திய அரசாங்கத்தை நிர்பந்தித்து கர்நாடகாவிடம் இருந்து தமிழக அரசு தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கணும் என்றார்.</p>
Source: Read Full Article