
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: பொன்னிழைகளில் முப்பரிமாண மாயம்... சோழர் காலத் தாக்கத்தில் தொடங்கி நாயக்கர், மராட்டியர் ஆதரவால் உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் ஓவியங்கள்.</p>
<p style="text-align: justify;">தமிழகத்தின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் போற்றப்படும் கலை வடிவங்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது தஞ்சாவூர் பாணி ஓவியம். அரசர்களின் அரண்மனைகளை அலங்கரித்த இந்த ஓவியங்கள், காலத்தின் மாற்றங்களைத் தாண்டி இன்று உலகின் பல நாடுகளில் கலை ஆர்வலர்களின் இல்லங்களை அலங்கரித்து வருகின்றன.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/d17f4188b8a715b276df5bf1d8f514311789217080882733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">ஒரு ஓவியம் என்பது வெறும் வண்ணங்களின் கலவை மட்டுமல்ல என்பதை உணர்த்தும் கலை வடிவமாக தஞ்சாவூர் ஓவியம் திகழ்கிறது. பொன்னின் ஒளிர்வு, கண்ணாடிக் கற்களின் அழகு, வண்ணங்களின் கம்பீரம் மற்றும் முப்பரிமாணத் தோற்றம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த ஓவியங்களுக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>சோழர் காலத் தாக்கம்... அரசர்களின் ஆதரவு!</strong></p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் பகுதி சோழர் காலம் முதலே கலை மற்றும் கட்டிடக்கலையின் முக்கிய மையமாக விளங்கியது. கோவில்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் மூலம் கலை வளர்ச்சிக்கு அந்தக் கால மன்னர்கள் முக்கியத்துவம் அளித்தனர்.</p>
<p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களின் ஆதரவால் தஞ்சாவூர் பாணி ஓவியக் கலை மேலும் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக 16, 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் இந்தக் கலை வடிவம் தனித்துவமான அடையாளத்துடன் வளர்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் துளஜா, அமரசிம்மன், சிவாஜி போன்ஸ்லே உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் தஞ்சாவூர் ஓவியக் கலைஞர்களுக்கு ஊக்கம் வழங்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன் ஆட்சிக் காலத்தில், 1739 முதல் 1763 வரை, இன்று நாம் அறியும் தஞ்சாவூர் பாணி ஓவியத்தின் தனித்துவமான வடிவம் முழுமையாக வளர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>பொன்னிழைகளில் ஒளிரும் முப்பரிமாண அழகு!</strong></p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் ஓவியங்களின் மிகப்பெரிய தனிச்சிறப்பு அதன் வண்ணத் தேர்விலும், உருவ அமைப்பிலும் மட்டுமல்ல. ஓவியத்தில் உருவங்களின் ஆடை மற்றும் அணிகலன்களுக்கு வழங்கப்படும் முப்பரிமாணத் தோற்றமே இந்தக் கலைக்கு உலக அளவில் தனி மரியாதையை பெற்றுத் தந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">சுண்ணாம்பு மற்றும் கோந்து உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி உருவங்களின் அணிகலன்கள் மற்றும் அலங்காரப் பகுதிகள் உயர்த்தப்பட்ட வடிவத்தில் உருவாக்கப்படுகின்றன. பின்னர் கண்ணாடிக் கற்கள் பொருத்தப்பட்டு பொன் வண்ண அலங்காரம் செய்யப்படுகிறது. ஒளி விழும் கோணத்திற்கு ஏற்ப பொன் அலங்காரங்கள் ஒளிர்வதால், ஓவியங்கள் உயிருடன் இருப்பதைப் போன்ற கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>இயற்கைச் சாயத்தில் உருவான வண்ண உலகம்</strong></p>
<p style="text-align: justify;">பழங்காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு இயற்கையிலிருந்து பெறப்பட்ட வண்ணச் சாயங்கள் பயன்படுத்தப்பட்டன. தாவரப் பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட சாயங்கள் ஓவியங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்கள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டன. பின்னணியில் கரும்பச்சை, அடர் நீலம் மற்றும் ஒளிர்சிவப்பு போன்ற நிறங்கள் இடம் பெற்றன.</p>
<p style="text-align: justify;">மைய உருவங்களுக்கு நீலம், மஞ்சள், பச்சை மற்றும் வெள்ளை நிறங்கள் பயன்படுத்தப்பட்டன. வண்ணங்கள் மெல்லியதாக அல்லாமல், திடமான மற்றும் கம்பீரமான கலவையாகத் தீட்டப்படுவது தஞ்சாவூர் பாணியின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.</p>
<p style="text-align: justify;"><strong>கிருஷ்ணன் முதல் பல்வேறு தெய்வங்கள் வரை!</strong></p>
<p style="text-align: justify;">முன்பெல்லாம் வெண்ணை உண்ணும் குழந்தை கிருஷ்ணன், ஆலிலை மேல் பள்ளிகொள்ளும் குழந்தை கிருஷ்ணன், ராமர் பட்டாபிஷேகம் மற்றும் தேவியரின் உருவங்கள் போன்றவை தஞ்சாவூர் ஓவியங்களில் அதிகமாக இடம் பெற்றன.</p>
<p style="text-align: justify;">ஒரே கருப்பொருளை பல்வேறு கலைஞர்கள் தங்களுக்கே உரிய கலை நுட்பத்தில் உருவாக்குவது வழக்கமாக இருந்தது. ஆனால் காலம் மாறியதுடன் தஞ்சாவூர் ஓவியங்களின் கருப்பொருளும் விரிவடைந்துள்ளது. இன்று பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் மட்டுமின்றி, பல்வேறு பாரம்பரிய மற்றும் கலை சார்ந்த உருவங்களும் இந்த பாணியில் உருவாக்கப்பட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;">முன்பு பெரிய அளவிலான ஓவியங்களுக்கே முக்கியத்துவம் இருந்த நிலையில், தற்போது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அலங்கரிக்கும் வகையில் சிறிய அளவிலான ஓவியங்களும் தயாரிக்கப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong>ஓவியத்தின் ஒரு பகுதியாக மரச்சட்டம்!</strong></p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் ஓவியத்தின் அழகை முழுமையாக்குவதில் அதன் மரச்சட்டத்துக்கும் முக்கிய பங்கு உள்ளது. நேர்த்தியாக செதுக்கப்பட்ட மரச் சட்டத்தின் நடுவில் ஓவியம் அமைக்கப்படும்.</p>
<p style="text-align: justify;">அந்த சட்டம் வெறும் பாதுகாப்புக்கான அமைப்பு அல்ல; அது ஓவியத்தின் கலை வடிவத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படும் மரச்சட்டங்கள் ஓவியத்தின் கம்பீரத்தை மேலும் உயர்த்துகின்றன. மா மற்றும் பலா போன்ற மரப் பலகைகள் பயன்படுத்தப்பட்டு ஓவியங்கள் உருவாக்கப்படும் பாரம்பரியமும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.</p>
<p style="text-align: justify;"><strong>உலகம் முழுவதும் கோலோச்சும் தஞ்சை கலை!</strong></p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் ஓவியங்களில் மையமாக இருக்கும் கடவுளின் உருவம் பெரும்பாலும் பெரிய அளவில் காட்சியளிக்கும். மற்ற உருவங்கள் கீழ்ப்பகுதியில் வரிசையாகவோ அல்லது ஒழுங்கான குழுவாகவோ அமைக்கப்படும். முழுமையான தோற்றம், நளினமான முகபாவனை, கம்பீரமான ஆடை அலங்காரம் ஆகியவை இந்த ஓவியங்களின் அழகை அதிகரிக்கின்றன. ஒரு காலத்தில் அரசர்களின் அரண்மனைகளை அலங்கரித்த இந்த கலை, இன்று சாதாரண வீடுகள் முதல் உலக நாடுகளில் உள்ள கலைக் கூடங்கள் வரை தனது பயணத்தை விரிவுபடுத்தியுள்ளது.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூரின் மண்ணில் பிறந்த ஒரு ஓவியக் கலை, பொன்னின் ஒளிர்வுடன் உலகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. காலம் மாறலாம்... மன்னர்கள் மாறலாம்... அரண்மனைகள் வரலாறாகலாம்... ஆனால் தஞ்சாவூர் ஓவியத்தின் கலை ஒளி மட்டும் இன்னும் மங்காமல் தலைமுறைகளை கடந்து ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.</p>
Source: Read Full Article