
<p>சென்னை : வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் பேட்டியளித்துக் கொண்டிருந்த போது திடீரென மின் தடை ஏற்பட்டதால், அவர் செல்பேசி வெளிச்சத்தில் பேட்டியளிக்கும் சூழல் உருவானது. இந்தச் சம்பவம், சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு நிலவுவதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளதாகப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.</p>
<p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., </p>
<p>வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேர்காணல் அளித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் செல்பேசி வெளிச்சத்தில் நேர்காணல் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.</p>
<p>தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் 20,500 மெகாவாட் - 21,000 மெகாவாட் என்ற உச்சத்தைத் தொட்ட தமிழகத்தின் மின் தேவை, வெப்பத்தின் அளவு குறையாததால் இப்போதும் அதே அளவிலேயே நீடிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 4000 மெகாவாட் அதிகம் ஆகும். இந்தக் கூடுதல் தேவையை சமாளிக்கத் தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம் ஆகும்.</p>
<p>சென்னை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை அனைத்து இடங்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், மின்வெட்டு இன்னும் நீக்கப்படவில்லை. பொதுவாக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அதிகாரிகளின் முயற்சிகளையும் தாண்டி மின்சாரம் தடை படுகிறது என்றால் சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரப்பற்றாக்குறை நிலவுகிறது என்று தான் பொருள்.</p>
<p>சென்னை பருத்திப்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்லும் வயர்கள் எரிந்து விட்டதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய பணியாளர்கள் இல்லாததால் அதை சரி செய்ய 8 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது. அதனால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் அவ்திப்பட்டுள்ளனர்.</p>
<p>மின்வெட்டை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின்வெட்டால் மக்கள் படும் அவதிகளை உணர்ந்து கொண்டு உடனடியாக மின்வெட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
Source: Read Full Article