
<h2 dir="ltr"><strong>தோழி வீட்டில் நகை திருடிய கல்லூரி மாணவி</strong></h2>
<p dir="ltr">கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஜாய் பிரியன்சி ( வயது 19 ) இவர் பொள்ளாச்சியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிகாம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, தனது தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். தோழியின் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அங்கு வைத்திருந்த 9 பவுன் தங்க நகையை திருடி உள்ளார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக , பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p>
<h2 dir="ltr"><strong>"காதலனின் பைக் ஆசை - நிறைவேற்றிய காதலி"</strong></h2>
<p>விசாரணையில் , தோழியின் வீட்டிலிருந்து ஜாய் பிரியன்சி நகை திருடியதும், அவர் திருடிய நகையை, ஒரு கடையில் ரூ. 2.50 லட்சத்துக்கு விற்பனை செய்து , தனது காதலன் ஜனகன் சிவா ( வயது 20 ) என்பவருக்கு பைக் வாங்கி கொடுத்ததும் தெரிய வந்தது. காதலனின் பைக் ஆசையை நிறைவேற்ற மாணவி நகை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து , மாணவி ஜாய் பிரியன்சி மீது திருட்டு வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.</p>
<p>இந்நிலையில் மாணவி ஜாய் பிரியன்சி திருடிய நகையை விற்ற தொகையில் பைக் வாங்க உடந்தையாக இருந்ததாக, அவரது காதலன் ஜனகன் சிவா மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.</p>
<p>கோவை போத்தனூரில் காதலனின் கடனை அடைக்கவும், சொகுசாக வாழவும் முகமூடி அணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட எம்.பி.ஏ மாணவி சிந்து, அவரது காதலன் பரணிதரன் ஆகியோர் கடந்த செப்.1ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அதே பாணியில் காதலனின் பைக் ஆசையை நிறைவேற்ற கல்லூரி மாணவி தோழி வீட்டில் நகை திருடி கைதானது கோவை மாவட்ட மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.</p>
Source: Read Full Article