
<p style="text-align: justify;">காஞ்சிபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் உள்ள 1,000 கால் மண்டபத்தில், தனது சொந்தச் செலவில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வளர்ச்சிப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டமன்ற நடைமுறைகள், தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் குறைபாடுகள் மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் குறித்துப் பல கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.</p>
<h3 style="text-align: justify;">லஞ்ச ஒழிப்பு சோதனையும் சட்டமன்ற கேள்விகளும்</h3>
<p style="text-align: justify;">சட்டமன்றப் பேரவையில் மக்கள் சார்ந்த பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து அதிக அளவில் கேள்விகளை எழுப்பி வரும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை அரசியல் ரீதியாக அச்சுறுத்தும் ஒரே நோக்கத்துடனேயே லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் ரீல் தளபதி ஆட்சிக் காலத்திலிருந்தும், ரியல் தளபதி ஆட்சிக் காலத்திலிருந்தும் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து கிடப்பிலேயே போடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனநாயக முறைப்படி சரிவர நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<h3 style="text-align: justify;">110 நாள் தவெக ஆட்சி: ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை என சாடல்</h3>
<p style="text-align: justify;">தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் காந்தி, தமிழகத்தில் தற்போது நடைபெறும் 110 நாட்கள் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஆட்சி என்பது வெறும் ‘ரீல் ஆட்சி’யாகவே இருக்கிறது என்று சாடினார். முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்குத் தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர்களை ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்வதைத் தவிர வேறு சாதனை எதுவும் இல்லை என்றார். </p>
<p style="text-align: justify;">மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் ஜே.கே. டயர் தொழிற்சாலை குறித்து அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கே தெரியவில்லை என்றால் கூடப் பரவாயில்லை, ஆனால் தொழில்துறை அமைச்சருக்கே அதுகுறித்த புரிதல் இல்லாமல் இருப்பது இந்த ஆட்சியின் அவலநிலையைத் தெளிவுபடுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் லாபத்தில் இயங்கி வந்த கோ-ஆப்டெக்ஸ் கைத்தறித் துறையில் 6 விற்பனை நிலையங்களுக்கு மூடுவிழா கண்டதுதான் இந்த ஆட்சியின் முக்கிய சாதனை என்றும் எள்ளலாகக் கூறினார்.</p>
<h3 style="text-align: justify;">வாக்காளர்கள் குறித்துப் பேசி கிளப்பிய சர்ச்சை</h3>
<p style="text-align: justify;">செய்தியாளர் சந்திப்பின் இறுதிக் கட்டத்தில், மாநிலத்தின் வாக்காளர்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் காந்தி, சுமார் 1 கோடித் 75 லட்சம் மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்றும், அதில் 35 சதவீதம் பேர் முட்டாள்தனமாக வாக்களித்ததாலேயே இந்த ஆட்சி அமையக் காரணமாகிவிட்டது என்றும் பேசினார். வாக்காளர்களை நேரடியாக விமர்சிக்கும் வகையில் அமைந்த அவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சு, தற்போது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.</p>
Source: Read Full Article