
<p>விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு பைபாஸ் சாலையில், வாகன நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் நோக்கில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலம் மற்றும் சப்-வே பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.</p>
<p>விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு பகுதியில் தஞ்சாவூர்-கும்பகோணம் நான்கு வழிச்சாலை பிரியும் இடத்தில் சென்னை-திருச்சி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே மேம்பாலம் ஒன்று உள்ள நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து மற்றும் விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், பாப்பனப்பட்டு கிராம மக்கள் பைபாஸ் சாலையை பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் சப்-வே அமைக்கவும் திட்டமிடப்பட்டது.</p>
<h2>ரூ.27 கோடியில் பணிகள்</h2>
<p>இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில் ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தேவகோட்டையைச் சேர்ந்த மீனாள் அண்ட் கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டன.</p>
<p>பணிகள் தொடங்கிய நிலையில், சாலையின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் சப்-வே அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக தீவிரமாக நடைபெற்றன.</p>
<p>ஆனால், தற்போது மேம்பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் அமைக்கும் பணிகள் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சப்-வேயை இணைக்கும் வகையில் சென்னை-திருச்சி மார்க்கத்தில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, மண் கொட்டி சாலை மட்டத்தை உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<h2>மண் கொட்டி மேடாக்கும் பணி தொடங்கவில்லை</h2>
<p>அதேநேரத்தில், திருச்சி-சென்னை மார்க்கத்தில் தடுப்புக் கட்டைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மண் கொட்டி மேடாக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது.</p>
<p>இதனால் திட்டத்தின் முக்கிய பணிகள் முழுமையாக முன்னேறாமல் இருப்பதாகவும், பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.</p>
<h2>கந்தலாகும் சர்வீஸ் சாலைகள்</h2>
<p>இதற்கிடையே, பணிகளின் ஒரு பகுதியாக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலையின் இருபுற சர்வீஸ் சாலைகளும் தற்போது சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.</p>
<p>சர்வீஸ் சாலைகளில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கே சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளங்கள் மற்றும் சாலையின் சேதமடைந்த பகுதிகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.</p>
<h2>45 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு</h2>
<p>மேம்பாலம், சப்-வே மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகள் தொடங்கி பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை சுமார் 45 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>பெரும்பாலான பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதால், திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே சென்னை-திருச்சி பைபாஸ் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வரும் நிலையில், ஆங்காங்கே நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.</p>
<h2>“வரும் வாரத்தில் சர்வீஸ் சாலை சீரமைக்கப்படும்”</h2>
<p>சர்வீஸ் சாலைகளின் தற்போதைய மோசமான நிலை குறித்து ஒப்பந்த நிறுவனத்தினரிடம் கேட்டபோது, “வரும் வாரத்தில் சர்வீஸ் சாலைகள் சீரமைக்கப்படும்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், மேம்பாலம் மற்றும் சப்-வே பணிகளின் தற்போதைய வேகத்தை பார்க்கும்போது, பணிகள் முழுமையாக நிறைவடைய மேலும் ஓராண்டு காலம் ஆகும் நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.</p>
<h2>பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை</h2>
<p>பாப்பனப்பட்டு பகுதியில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டு, விபத்துகளை தடுப்பதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்வதற்கும் மேம்பாலம் மற்றும் சப்-வே திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பணிகளை மேலும் தாமதப்படுத்தாமல், தேவையான தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்களை அதிகரித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக சேதமடைந்துள்ள சர்வீஸ் சாலைகளை உடனடியாக சீரமைத்து, வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.</p>
<p>மேம்பாலம் மற்றும் சப்-வே பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.</p>
Source: Read Full Article