
<p style="text-align: left;">போக்குவரத்துத் துறையில் முறைகேடுகளா? 25 ஆண்டுகள் உழைத்த 400 ஊழியர்களை ஒரே உத்தரவில் வெளியேற்றுவதா? - வேல்முருகன்</p>
<p style="text-align: left;">போக்குவரத்துத் துறையில் 25 ஆண்டுகள் உழைத்த 400 ஊழியர்களின் பணிநீக்கத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p style="text-align: left;">தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் கீழ் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் சுமார் 400 ஊழியர்களின் திடீர் பணிநீக்க நடவடிக்கை கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அரசின் போக்குவரத்துத் துறையின் பணிகளில் தங்களை அர்ப்பணித்து, தங்களது இளமைக்காலத்தையும் உழைப்பையும் அரசுப் பணிக்காகச் செலவிட்டவர்களை, இன்று ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் வாழ்வாதாரமற்றவர்களாக மாற்றுவது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்க முடியாது. இவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்கள். அந்த ஆண்டுகள் வெறும் பணிக்காலம் மட்டுமல்ல. அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை, குழந்தைகளின் கல்வி, எதிர்காலக் கனவுகள் என அனைத்தும் அந்த ஊதியத்தைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஊழியரின் பணியைப் பறிப்பது என்பது அவருடைய வருமானத்தை மட்டும் பறிப்பதல்ல. ஒரு குடும்பத்தின் வாழ்வாதார அழிப்பு. பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய எதிர்காலத்தை ஒரே நாளில் சிதைப்பது. அதிலும், இத்தனை ஆண்டுகள் பணியாற்றி அனுபவமும் துறை சார்ந்த அறிவும் பெற்றவர்களின் உழைப்பைத் திடீரென நிராகரிப்பது, மனிதநேயத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான அணுகுமுறையாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p>
<p style="text-align: left;"> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/lvH1hn1jPwo?si=U07Z5_PnaSpoa0YN" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p style="text-align: left;">போக்குவரத்துத் துறையில் சேவைகள் மற்றும் உரிமம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்த இவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருக்கும்போது, பணிநீக்கமே ஒரே தீர்வு என்ற நிர்வாக மனப்பான்மை ஏன்? என்ற கேள்வி எழுகிறது. 400 ஊழியர்கள் என்ற எண்ணிக்கையின் பின்னால் 400 குடும்பங்கள் உள்ளன. அந்தக் குடும்பங்களின் உணவு, குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள், வீட்டு வாடகை, கடன் சுமைகள் என அன்றாட வாழ்க்கையின் அத்தனை தேவைகளும் இருக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தை வெறும் நிர்வாகப் பிரச்சினையாகக் கருதாமல், 400 குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான சமூகப் பிரச்சினையாக தமிழ்நாடு அரசு அணுக வேண்டும். பணிநீக்க நடவடிக்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் உறுதி செய்வதோடு, தேவையான இடங்களில் மாற்றுப்பணி, மறுபயிற்சி அல்லது பணியிட மாற்றம் போன்ற மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்.</p>
<p style="text-align: left;">பல ஆண்டுகளாக அரசுப் பணிக்கு வழங்கிய உழைப்பை மதித்து, அவர்களின் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான மனிதநேயமான தீர்வை அரசு காண வேண்டும். தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தலையிட்டு, சுமார் 400 ஊழியர்களின் பணிநீக்கத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: left;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/which-creature-has-3-hearts-273785" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article