
<p style="text-align: justify;">மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செப்டம்பர் 19 அன்று ரேஷன் கார்டில் கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;"><strong>மயிலாடுதுறை: </strong>மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து மின்னணு குடும்ப அட்டை விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின்க கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றிப் பெறுவதற்கும், குடும்ப அட்டை விவரங்களை முழுமையாகப் புதுப்பிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p>
<p style="text-align: justify;">இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">சிறப்பு முகாம் அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு</h3>
<p style="text-align: justify;">பொதுமக்களின் வசதிக்காக வரும் 19.09.2026 சனிக்கிழமை அன்று மயிலாடுதுறை மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் இதுவரையிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் இந்த முகாமில் நேரில் பங்கேற்று தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம். </p>
<p style="text-align: justify;">நியாய விலைக் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்கள் மூலம் இந்தச் சரிபார்ப்புப் பணிகள் எளிதாகச் செய்யப்படும். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி ரேகையைப் பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<h3 style="text-align: justify;">வெளியூரில் வசிப்பவர்களுக்கான சிறப்பு வசதி</h3>
<p style="text-align: justify;">பணி நிமித்தமாகவோ அல்லது கல்வி மற்றும் பிற காரணங்களுக்காகவோ மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைக்கு வெளியே தற்காலிகமாக வசித்து வரும் குடும்ப அட்டை உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டக் குடும்ப அட்டையில் பெயர் இருந்து, தற்போது வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள், கைவிரல் ரேகை பதிவிற்காக சொந்த ஊருக்கு வர வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தற்போது எந்தப் பகுதியில் வசித்து வருகிறார்களோ, அதற்கு மிக அருகில் உள்ள ஏதேனும் ஒரு நியாய விலைக் கடைக்கு 19.09.2026 அன்று நேரில் சென்று இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்கலாம். அங்குள்ள பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் கைவிரல் ரேகையைப் பதிவு செய்து தங்களது குடும்ப அட்டை விவரங்களை எளிதாக உறுதி செய்து கொள்ள முடியும்.</p>
<h3 style="text-align: justify;">உரிமைகளை உறுதி செய்ய ஆட்சியர் வேண்டுகோள்</h3>
<p style="text-align: justify;">பொது விநியோகத் திட்ட சேவைகள் தடையின்றித் தொடர்ந்து கிடைக்கப் பெறுவதற்கும், தகுதியான அனைத்துப் பயன்பாட்டாளர்களும் அரசின் நலத்திட்டப் பயன்களை முழுமையாகப் பெறுவதற்கும் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மிக அவசியமான ஒன்றாகும். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குறித்த நாளில் தங்களுக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும். தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகையினையும் தவறாமல் பதிவு செய்து, அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களையும் உரிமைகளையும் தடையின்றிப் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.</p>
Source: Read Full Article