
<p>தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிகளவிலான மின் கட்டணம் வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில் இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல்களைக் காணலாம்.</p>
<h2><strong>இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம்</strong></h2>
<p>தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடும் பணியானது நடைபெற்று வருகிறது. மாதம் ஒருமுறை இருந்த இந்த நடைமுறை 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றம் செய்யப்பட்டது. முன்பு கட்டணம் செலுத்த மையங்கள் செயல்பட்டு வந்தது. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாகக் குவிவதைத் தவிர்க்க இந்த முறை கொண்டுவரப்பட்டது. தற்போது ஆன்லைனில், யுபிஐ செயலிகள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டது. இதனால் மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு வருவது குறைந்துள்ளது. </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/12/77b5dbd299e663bed669c521b2d85c7a1786513053738224_original.jpg" width="720" height="576" /></p>
<h2><strong>மின் கட்டணம் உயர்வு</strong></h2>
<p>தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசும் பொறுப்பேற்றும் செயலாற்றும் 5 ஆண்டு காலத்தில் நிதி பிரச்னையை காரணம் காட்டி மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அப்படியாக கடந்த திமுக ஆட்சியில் கடைசியாக 2025 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பல்கூட்டு மின் கட்டணக் கொள்கையின்படி பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஜூலை 1 அன்று மின் கட்டணத்தை மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டது. அதன்படி திமுக ஆட்சியில் மொத்தம் 4 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் புதிய மின் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டது. </p>
<h2><strong>மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி?</strong></h2>
<p>2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தவெக அரசு 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால் 200 யூனிட் மின்சாரம் இலவசம். மீதமுள்ள 300 யூனிட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் 500க்கும் மேல் ஒரு யூனிட் அதிகமாக பயன்படுத்தினாலும் 100 யூனிட் மின்சாரம் மட்டும் தான் இலவசம் எனவும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. </p>
<p>இப்படியான நிலையில் திமுக ஆட்சியில் கடைசியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அடிப்படையில் 201 - 400 யூனிட்டுகள் வரை தோராயமாக ரூ.4.80 ஆகவும், 401 - 500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60, 501 - 600 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.80, 601 - 800ல் ஒரு யூனிட்டுக்கு ரூ.9.95, 801 - 1000 யூனிட்டுகளில் ஒரு யூனிட்டுக்கு ரூ.11.05, 1000 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.12.15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போது வரை நிலுவையில் உள்ளது. </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/12/753af1a083c6026b6b85e5849fe7fc7a1786514116385224_original.jpg" width="720" height="556" /></p>
<h2>மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது இப்படித்தான்</h2>
<p>நீங்கள் ஒரு 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என வைக்கலாம். மீதமுள்ள 300 யூனிட்டில் 200 -400 யூனிட்டுக்கு ரூ.4.70 என கணக்கீடு செய்து 200 யூனிட்டுகளுக்கு ரூ.960ம், 401 முதல் 500 யூனிட்டுகளுக்கு ரூ.6.45 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.645 என கணக்கிடப்பட்டு ரூ.1,605 ஆக வரலாம். இதில் அரசின் மானியம் கழித்தால் வரும் தொகை உங்கள் கணக்கில் காட்டப்படும். 501 யூனிட்டுக்கு ஒரு யூனிட் அதிகமாக 501 ஆக பயன்படுத்தினால் இந்த கட்டணம் இன்னும் எகிறும்.</p>
<p>இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்படுவதால் இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அதாவது 2 மாதங்களுக்கு நீங்கள் 501 யூனிட்டுக்குள் பயன்படுத்தி விட்டீர்கள் எனில் அவை இரண்டாக பிரிக்கப்பட்டு 250.5 யூனிட் என எடுக்கப்படும். 500 யூனிட்டை தாண்டிலாம் நீங்கள் 100 யூனிட்டிற்கு தான் தகுதியானவர்கள். அதை இரண்டாக பிரித்தால் ஒரு மாதத்திற்கு 50 யூனிட் தான் இலவச மின்சாரம். அதனால் 51 முதல் 250.5 வரை யூனிட் மின்சாரம் கணக்கிடப்படும். அதை இரண்டு மாதத்திற்கு பெருக்கி, அரசு மானியம் கழித்து கட்டணம் வரவு வைக்கப்படும். </p>
<p>உதாரணமாக 2025 ஜூலை மின்கட்டண திருத்தத்தின்படி நீங்கள் இரு மாதங்களுக்கு 270 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், உங்களுக்கான மொத்த மின்கட்டணம் ரூ.564 வந்திருக்கும். அதாவது 100 யூனிட் இலவசம், 101 - 200 யூனிட்டுகள் வரை 2.35 கட்டணம் என்பதால் ரூ.235 ஆகவும், 201-270 யூனிட் வரை ரூ.4.70 கட்டணம் என்பதால் ரூ.329 ஆகவும் கணக்கிடப்பட்டு ரூ.564 கட்டணமாக பார்க்கப்படும். </p>
<p><a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> ஆட்சியில் 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதால் மீதமுள்ள 70 யூனிட்டுக்கு ரூ.4.70 கட்டணமாக பார்க்கப்பட்டு ரூ.329 வந்திருக்கும். இதனுடன் சில நேரங்களில் மீட்டர் வாடகை, இதர வரி என சேர்க்கப்படுகிறது. </p>
<p><strong>ALSO READ | <a href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-orders-a-review-to-revise-the-working-hours-of-ration-shops-270905" target="_blank" rel="noopener">ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு</a></strong></p>
<h2>யார் மேல் தவறு?</h2>
<p>மின் கட்டணம் கணக்கீடு செய்வதில் தவறு என குறிப்பிட்டு சொல்ல முடியாது. அதற்கு காரணம் மின் மீட்டர்களில் சிக்கல் எழலாம், அதீத மின்னழுத்தம், அதிகமாக பயன்பாடு, மின்வாரிய பணியாளர்களின் தவறுகள், மக்களுக்கு மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுவது எப்படி என தெரியாமல் நிகழும் குழப்பமாக இருக்கலாம். குழப்பதை தீர்த்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. தவறு நடந்திருக்கும் என நினைத்தால் தாராளமாக மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேளுங்கள். </p>
Source: Read Full Article