
<p><span dir="auto">ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, 45 கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கப்பல்களும் அடங்கும். இந்த கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்கும் விதிகளை மீறியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.</span></p>
<p><span dir="auto">ஈரான், இந்தியாவிலிருந்து வரும் கப்பல்களுக்கும், அதோடு சேர்த்து பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கிரீஸ், கத்தார், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில் நார்வேயும் இடம்பெற்றுள்ளது. ஈரான் இரண்டு இந்திய கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது. </span></p>
<h2><span dir="auto">பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம் அறிவித்தது என்ன.?</span></h2>
<p><span dir="auto">ஹார்முஸ் நீர்வழிப்பாதை வழியாக செல்லும்போது, ஈரானிய விதிமுறைகளுக்கு இணங்காத கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளக்கூடும் என்று ஈரானின் பாரசீக வளைகுடா நீர்வழி ஆணையம் (PGSA) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. விதிக்கப்படக்கூடிய சாத்தியமான தடைகளில், அபராதம், தடுத்து வைத்தல் அல்லது பறிமுதல் செய்தல் ஆகியவை அடங்கும் என்று PGSA கூறியது.</span></p>
<p><span dir="auto">பிற்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, பாரசீக வளைகுடாப் பகுதிக்கு சரக்குகளை அனுப்பும் மற்றும் அங்கிருந்து பெறும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள், ஒரு கப்பலை வாடகைக்கு எடுப்பதற்கு முன்பு, அதன் இணையதளத்தில் உள்ள "விதிமுறைகளுக்கு உட்படாத கப்பல்களின்" பட்டியலைச் சரிபார்க்குமாறு PGSA வலியுறுத்தியுள்ளது.</span></p>
<h2><span dir="auto">இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படுமா.?</span></h2>
<p><span dir="auto">ஈரானுடன் இந்தியா நட்பு ரீதியிலேயே தொடர்வதால், ஹார்முஸிலிருந்து இந்தியாவிற்கு வரும் கப்பல்களுக்கு பாதிப்பு குறைவுதான். தற்போது 2 கப்பல்களுக்கு மட்டுமே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தியாவிற்கு தற்போது வரும் எண்ணெய் வரத்தில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாது என்றே கருதப்படுகிறது.</span></p>
<h2><span dir="auto">ஹார்முஸில் தற்போதைய நிலைமை என்ன.?</span></h2>
<p><span dir="auto">நேற்றைய நிலவரப்படி, ஐந்து சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றன. இந்த எண்ணிக்கை, முந்தைய நாளின் எண்ணிக்கையை ஏறக்குறைய ஒத்திருந்தாலும், 10-நாட்கள் சராசரியான 15 கப்பல்களை விட கணிசமாகக் குறைவாக இருந்தது. 0408 GMT-ல் பதிவுசெய்யப்பட்ட Kpler தரவுகளின்படி, இரண்டு திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) டேங்கர்களும், ஒரு பிட்டுமென் டேங்கரும் ஹார்முஸிலிருந்து வெளியேறின. அதே நேரத்தில், இரண்டு காலிப் பொருள் டேங்கர்கள் உள்ளே நுழைந்தன.</span></p>
<h2><span dir="auto">அமெரிக்கா-ஈரான் இடையே தணியாத பதற்றம்</span></h2>
<p><span dir="auto">அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், மீண்டும் போர் தொடங்கிவிடுமோ என்ற பதற்றம் இன்னும் நீடிக்கிறது. ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்தார். அமெரிக்கா இனி பொருளாதார ரீதியாகவே தான் ஈரானை சுற்றி வளைக்கும். அதனால், மற்றொரு தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை என்றே கணிக்கப்படுகிறது.</span></p>
<p> </p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/know-how-to-eat-cashews-here-is-the-health-benefits-recipes-daily-intake-guide-272517" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article