
<p style="text-align: justify;">காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு செல்ல முன்னெடுப்பை தானே எடுத்ததாகவும், அதனால் அவமானம் வந்தால் அதனை தமிழ்நாடு மக்களுக்காக தாங்கிக்கொள்ள தயாராக இருந்ததாகவும் சட்டப்பேரவையில் தெரிவித்தார் முதல்வர் விஜய். கர்நாடகாவிற்கு முதல்வர் விஜய் செல்வது தொடர்பாக வெளிப்படையான அறிவிப்பு ஏதுவும் வெளியாகாத நிலையில், கர்நாடாக முதல்வர் டிகே சிவக்குமார் இதனை சொன்ன பிறகே இது அதிகாரப்பூர்வமான நகர்வு என்பது தெரியவந்தது.</p>
<p style="text-align: justify;">இது குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி.</p>
<p style="text-align: justify;"><strong><em>முரசொலி குறிப்பிட்டுள்ளது என்ன ?</em></strong></p>
<p style="text-align: justify;">இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் தலையங்கத்தில் ‘காவிரி பிரச்சினையில் தனியாக சென்று கர்நாடக அரசிடம் பேசுவதாகவும், பார்த்த மயக்கத்தில் அவர்கள் தண்ணீரை திறந்து விடுவதாகவும், அதனைப் பெரிய சாதனையாகத் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடுவதாகவும் முதலமைச்சர் விஜய் கனவு கண்டார். அது நடக்கவில்லையென்றதும் ‘தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்குவேன்’ என்று சோக நடிப்பை காட்டுகிறார். எவ்வளவு கோக்குமாக்கு?</p>
<p style="text-align: justify;">காவிரியில் நீர் உரிமையை நிலைநாட்டுவதற்காக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லப்போகிறார் என்று முதலில் சொன்னது வேளாண் துறை அமைச்சர் தான். இதனால் எந்த பயனும் இல்லை. சும்மா கணக்கு காட்டதான் பயன்படும் என்று திமுக தலைவர் மு.க.<a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> அறிக்கை வெளியிட்டார். உழவர் அமைப்புகளும் இதே கருத்தைச் சொன்னார்கள். அதை மீறி கர்நாடகம் செல்வதில் உறுதியாக இருந்தார் விஜய். முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லும் திட்டம் இல்லை என்று இன்னொரு அமைச்சரை வைத்துச் சொல்ல வைத்தார்கள். ஆனால், இதில் முழு உண்மையை கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமாரே உடைத்துவிட்டார்.</p>
<p style="text-align: justify;"><strong><em>விஜய் உண்மையை சொல்லவில்லை</em></strong></p>
<p style="text-align: justify;">கர்நாடக முதலமைச்சரிடம் தான் பேசி இருக்கிறேன் என்பதையும் விஜய் வெளிப்படுத்தவில்லை. மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினை பற்றி, இன்னொரு மாநில முதலமைச்சருடன் பேசியதை மறைத்தார் விஜய். அடுத்ததாக, கர்நாடக வந்து பேசுகிறேன் என்ற விருப்பமானது தமிழ்நாடு முதல்வரிடமிருந்துதான் வந்தது என்பதையும் டிகே சிவக்குமார் சொன்னார். அப்போதும் தமிழநாடு அரசு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.</p>
<p style="text-align: justify;">போக வேண்டாம் என்று தமிழ்நாட்டு மக்கள் சொன்னதை போலவே வரக்கூடாது என்று கர்நாடகாவிலும் பலரும் கொந்தளித்தார்கள். வரவிடக் கூடாது என்று தடை போட்டார்கள்.</p>
<p style="text-align: justify;"><strong><em>இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய் ? – முரசொலி அடுக்கடுக்கான கேள்வி</em></strong></p>
<ul style="text-align: justify;">
<li>முதலில் விஜய்யை வரச் சொன்னார் கர்நாடக முதலமைச்சர். பின்னர் அவரே வர வேண்டாம் என்றார். இந்த அவமானம் தேவையா?</li>
<li>கன்னட அமைப்புகள் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. இந்த அவமானம் தேவையா?</li>
<li>முதலமைச்சர் விஜயின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்த அவமானம் தேவையா?</li>
<li>ஜனநாயகன் பட விளம்பர பலகைகள் கிழித்து எறியப்பட்டன. இந்த அவமானம் தேவையா?</li>
<li>மாண்டியாவில் பல திரையரங்குகளில் விஜய் படக் காட்சிகள் ரத்துச் செய்யப்பட்டன. இந்த அவமானம் தேவையா?</li>
</ul>
<p style="text-align: justify;">இவ்வளவு அவமானங்களையும் பட்ட பிறகு, தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்குவேன் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> என்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி முரசொலி நாளேடு அவரை விமர்சித்துள்ளது’</p>
<p style="text-align: justify;">என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது முரசொலி நாளேடு</p>
Source: Read Full Article