
<p>தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p>
<h2><strong>மீனவர்கள் கைது:</strong></h2>
<p>இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் விஜய் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p>
<p>இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,</p>
<h2><strong>ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்:</strong></h2>
<p>தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் மீன்பிடி படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.</p>
<p>அந்த கடிதத்தில் 12.08.2026 இரவு மீன்பிடி இயந்திர படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<h2><strong>49 மீனவர்கள்:</strong></h2>
<p>இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனக்குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீனவ சமூகத்தினரிடையே குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிகுந்த கவலையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருவதாகவும் நாளது வரையில் 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p>எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<h2><strong>உடனடி நடவடிக்கை தேவை:</strong></h2>
<p>இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இந்த விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும், நிம்மதியையும் அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>எனவே, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடி தலையீட்டைத் தான் எதிர்நோக்குவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/never-be-hostile-to-these-people-271075" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article