
<p style="text-align: justify;"><strong>மயிலாடுதுறை: </strong>தமிழகத்தில் கடந்த 16 கல்வி ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களை, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">தேர்தல் வாக்குறுதியைச் சுட்டிக்காட்டி அறிக்கை</h3>
<p style="text-align: justify;">இதுதொடர்பாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:</p>
<p style="text-align: justify;">தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் எனத் தமிழக வெற்றிச் கழகத்தின் (<a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>) தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">அதில், தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயமாக நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என்றும்; அவர்கள் பணியாற்றும் தற்காலிகக் காலத்திலும் நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">"இந்த முக்கியமான தேர்தல் வாக்குறுதியை அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் கடந்த 16 கல்வி ஆண்டுகளாகப் பணி பாதுகாப்பு இன்றித் தவித்து வரும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்க்கையில் விடியல் ஏற்படும்." என செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">11,773 குடும்பங்களின் வாழ்வாதாரக் கோரிக்கை</h3>
<p style="text-align: justify;">உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் கடந்த 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.</p>
<p style="text-align: justify;">கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலமாகவே இவர்கள் பணி நியமனம் பெற்றனர். தற்போதைய 2026-2027 ஆம் கல்வி ஆண்டு வரை, சுமார் 16 ஆண்டுகளாக இவர்கள் தற்காலிக ஊழியர்களாகவே தொடர்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">ஏற்கனவே 110 விதியின் கீழ் நியமிக்கப்பட்ட இவர்களை, மீண்டும் ஒருமுறை சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு சார்பில் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.</p>
<h3 style="text-align: justify;">நிதிச் சுமை மற்றும் ஊதிய உயர்வு ஒப்பீடு</h3>
<p style="text-align: justify;">மேலும் அந்த அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதன் மூலம் அரசுக்குக் கூடுதலாகச் சுமார் ரூ 300 கோடி மட்டுமே நிதி தேவைப்படும் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>தற்போதைய நிலை:</strong> தொகுப்பூதியம்: ரூபாய் 15,000 மட்டும் - பணி பாதுகாப்பு இல்லை.</p>
<p style="text-align: justify;">பணி நிரந்தரத்திற்குப் பின் (Pay Band Level 10) </p>
<p style="text-align: justify;"><strong>அடிப்படை ஊதியம்:</strong> ரூபாய் 20,600 </p>
<p style="text-align: justify;">காலமுறை ஊதியம், அகவிலைப்படி, வாடகைப்படி, மருத்துவப்படியுடன் சுமார் 35,000 ரூபாய். </p>
<p style="text-align: justify;">பகுதிநேர ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசுப் பணிக்கு முழுமையாக ஈர்க்கப்படுவதன் மூலம், அரசின் அனைத்து பணப் பலன்களும் சலுகைகளும் அவர்களுக்குக் கிடைக்கும். இதனால் 11,773 ஆசிரியர்களின் குடும்பப் பொருளாதார நிலை உயர்வதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் மேம்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டுகோள்</h3>
<p style="text-align: justify;">16 கல்வி ஆண்டுகளாகத் தங்களது இளமைக் காலத்தை அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணித்துள்ள பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே 110 விதியின் கீழ் பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட்டு, 11,773 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
Source: Read Full Article