
<p>சென்னையில் ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. </p>
<h2><strong>சிங்கார சென்னையின் மகத்தான திட்டம்</strong></h2>
<p>தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை இந்தியாவின் சிறந்த நகரமாக மாற்றும் பொருட்டு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படியாக சென்னையில் பஸ், ரயில், விமானம், கப்பல் என 4 வகையான போக்குவரத்து சாதனங்கள் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் சென்னைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் இயக்கப்பட்டு வருகிறது. </p>
<h2><strong>இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள்</strong></h2>
<p>இரண்டாவது கட்ட திட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மாதவரம் தொடங்கி சிறுசேரி சிப்காட் வரையும், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p>
<p><iframe title="Thangam thennarasu |"15,000 கோடி எப்படி வந்துச்சு”POINT-ஐ பிடித்த தங்கம்! பல்பு வாங்கிய மரிய வில்சன்" src="https://www.youtube.com/embed/bTRUetrJjfU" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>வாட்டர் மெட்ரோ திட்டம்</strong></h2>
<p>இப்படியான நிலையில் சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான இ-டெண்டர் விடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் கால்வாய் வழியாக இச்சேவை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிநவீன படகுப் போக்குவரத்து அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகுகளை இயக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p>
<h2><strong>எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள்</strong></h2>
<p>ஒருவேளை இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் அதில் முழுக்க முற்றிலும் பேட்டரியால் இயங்கும் படகுகள் பயன்படுத்தப்படும். ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது கூவம் மற்றும் அடையாறு நதிகளை சிங்கப்பூர் மற்றும் சியோல் நகர நதிக்கரைகளைப் போல மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. </p>
<p>இந்தியாவின் முதலாவது வாட்டர் மெட்ரோ திட்டம் கேரள மாநிலம் கொச்சியில் வெற்றிகரமாக தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் போன்றே குளிரூட்டப்பட்ட கட்டமைப்பு மற்றும் தானியங்கி பயணச்சீட்டு வசதிகள் கொண்ட வசதிகள் உள்ளது. இந்த வாட்டர் மெட்ரோவில் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் போக்குவரத்து நெருக்கடி கொண்ட சென்னை போன்ற பெருநகரங்களில் நிச்சயம் இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-how-to-lose-5-kg-of-weight-in-a-month-270335" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article