
<p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை உற்சவம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.</p>
<h3 style="text-align: justify;">தல வரலாறு மற்றும் பெருமைகள்</h3>
<p style="text-align: justify;">சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து உருவான ஆறு தீப்பொறிகள் சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தன. அக்குழந்தைகளை பார்வதி தேவி ஒன்றாக இணைக்க முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்தது. சரவணப்பொய்கையில் தோன்றிய குழந்தைகளை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிவபெருமான் நட்சத்திர கூட்டங்களாக விளங்கும் வரத்தை அருளினார். இதனால் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. புராண காலத்தில் பகீரத மன்னன், இந்திரன், துர்வாச முனிவர், குருபகவான் ஆகியோர் வழிபட்ட இத்திருக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு, திருமணம், பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.</p>
<h3 style="text-align: justify;">ஆடி பரணி மற்றும் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடுகள்</h3>
<p style="text-align: justify;">இந்த ஆண்டு ஆடி பரணியும் ஆடி கிருத்திகையும் குருவாரத்தில் (வியாழக்கிழமை) இணைந்து வந்ததால் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் காணப்பட்டது. ஆடி பரணியை முன்னிட்டு புதன்கிழமை இரவு மூலவர் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பரணி அபிஷேக அடியார்கள் 51 குடம் பால் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, கோ பூசைக்குப் பிறகு மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 11 விதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டுச் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்று, சுவாமிமலையில் சிவபெருமானுக்கு உபதேசித்த பிரணவ உபதேச அலங்காரத்தில் காட்சியளித்தார்.</p>
<h3 style="text-align: justify;">காவடி பிரார்த்தனை மற்றும் பக்தர்களுக்கான வசதிகள்</h3>
<p style="text-align: justify;">ஆடி கிருத்திகையை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களுடைய பிரார்த்தனைகளைச் செலுத்தினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் எளிதாகச் சென்று தரிசனம் செய்ய ஏதுவாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நிழற்பந்தலுடன் கூடிய சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், கோயில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்குத் தேவையான அன்னதானம் மற்றும் நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன. திருப்பெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்களும், பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்களும் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் கோயில் பணிகளில் ஈடுபட்டனர்.</p>
Source: Read Full Article