
<p>பதவி வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி கவுன்சிலரை நாற்காலியுடன் தூக்கிச் சென்ற அவலம் – இளையான்குடி பேரூராட்சி கூட்டத்தில் அதிர்ச்சி.</p>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>நியமன கவுன்சிலர் முகமது இக்பாலும் பங்கேற்பு</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் முகமது இக்பாலும் பங்கேற்றார். இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டம் முதல் தளத்தில் நடைபெற்ற நிலையில், மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் சாய்தளம் அல்லது மின்தூக்கி வசதி இல்லாததாக கூறப்படுகிறது. இதனால் படிக்கட்டுகள் வழியாக சுயமாகச் செல்ல முடியாத முகமது இக்பாலை, உடன் இருந்தவர்கள் நாற்காலியுடன் சேர்த்து தூக்கிச் சென்று கூட்ட அரங்கில் அமர வைத்தனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மற்றவர்களின் உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இதுதொடர்பான காட்சி தற்போது கவனம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர் வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம், அவர்களின் குரலும் பிரதிநிதித்துவமும் உள்ளாட்சி நிர்வாகத்தில் இடம்பெற வேண்டும் என்பதுதான். ஆனால், ஒரு மாற்றுத்திறனாளி கவுன்சிலராக நியமிக்கப்பட்ட பிறகும், அவர் பங்கேற்க வேண்டிய பேரூராட்சி கூட்ட அரங்கிற்குச் செல்வதற்கே மற்றவர்களின் உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>சாய்தளம் அல்லது மின்தூக்கி வசதி</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலர்களாக நியமிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், அவர்கள் தங்களது பணியை சுயமாக மேற்கொள்ளும் வகையில் அலுவலகங்களிலும் கூட்ட அரங்குகளிலும் தேவையான வசதிகள் இருக்க வேண்டும். முதல் தளத்திற்கு செல்ல சாய்தளம் அல்லது மின்தூக்கி வசதி இருந்தால், நாங்களே சுயமாகச் சென்று கூட்டங்களில் பங்கேற்க முடியும். தினமும் மற்றவர்களின் உதவியை நாடி மேலே சென்று வர வேண்டிய நிலை ஏற்படுவது வேதனை அளிக்கிறது” என்றனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>அடிப்படை அணுகல்தன்மை வசதிகள் இருக்க வேண்டும் </strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி வழங்குவது மட்டுமின்றி, அந்தப் பதவியை அவர்கள் சுயமரியாதையுடனும் சுதந்திரமாகவும் செயல்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதும் நிர்வாகத்தின் பொறுப்பு என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கான அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் அடிப்படை அணுகல்தன்மை (Accessibility) வசதிகள் இருக்க வேண்டும் என்ற நிலையில், இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலை கவனத்தை பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்தப் பிரதிநிதியே கூட்ட அரங்கிற்குச் செல்ல பிறரால் தூக்கிச் செல்லப்பட வேண்டிய நிலை ஏன்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எனவே, இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் சாய்தளம், மின்தூக்கி உள்ளிட்ட தேவையான அணுகல்தன்மை வசதிகளை ஏற்படுத்தி, இனி எந்த ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினரும் பிறரின் உதவியைச் சார்ந்து கூட்ட அரங்கிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.</div>
Source: Read Full Article