
<p style="text-align: justify;">தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், கடந்த ஓராண்டாகவே அரசியலில் கால்பதிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தனது ரசிகர் மன்றத்தை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றும் தீவிர முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். முதற்கட்ட நடவடிக்கையாக, தனது பிறந்த நாள் விழாவின் போது ரசிகர் மன்றத்திற்கான புதிய கொடியை வெளியிட்ட அவர், அந்த மேடையில் மறைமுகமாக பல்வேறு அரசியல் கருத்துக்களையும் பேசினார்.</p>
<h3 style="text-align: justify;">உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக்கம்</h3>
<p style="text-align: justify;">சட்டசபை தொகுதி வாரியாக தனது மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை நடிகர் தனுஷ் தற்போது வேகம் எடுத்துள்ளார். கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் இந்த உறுப்பினர் சேர்க்கை முறைப்படி தொடங்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டிற்குள்ளாக தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும் எனத் தனது மன்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். </p>
<p style="text-align: justify;">இளம் நடிகர்களில் அதிகளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள தனுஷ், இளைஞர்களைக் குறிவைத்துத் தனது அரசியல் செயல்பாடுகளைத் திட்டமிட்டு வருகிறார். முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அவர்கள் பதவியேற்பதற்கு முன்பாக அவரது ரசிகர் மன்றம் என்னென்ன நலத்திட்டப் பணிகளைச் செய்ததோ, அதேபோல மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வது, ரத்த தானம் வழங்குவது மற்றும் அன்னதானம் அளிப்பது போன்ற உதவிகளைத் தனுஷும் தற்சமயம் செய்து வருகிறார்.</p>
<h3 style="text-align: justify;">வலைதள செயல்பாடு மற்றும் அரசின் கண்காணிப்பு</h3>
<p style="text-align: justify;">மாவட்ட வாரியாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களைத் தொகுதி வாரியாக விரிவாக்கம் செய்து, உறுப்பினர் சேர்க்கை மூலம் தனது பலத்தை எடைபோடத் தனுஷ் திட்டமிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவருடைய இந்த நகர்வுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் அமைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, தனுஷின் அரசியல் நகர்வுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உளவுத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக உளவுத்துறையில் தனி சிறப்புத் குழு உருவாக்கப்பட்டு, தனுஷ் உட்பட பல்வேறு நடிகர்களின் ரசிகர் மன்றச் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், முதல்வரின் தனிச் செயலாளர் ஜெகநீஷ் மேற்பார்வையில் தனுஷ் அமைப்பின் சமூக வலைதளச் செயல்பாடுகளும் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
Source: Read Full Article